சென்னை திரு.வி.க நகர் திருவள்ளுவர் குறுக்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் கவுல் பாஷா (48). இவர் கடந்த 3 மாதமாக மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் செக்யூரிட்டி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ வில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 10 மணிக்கு வழக்கம் போல கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். மாலையில் கவுல் பாஷா வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 



 

உடனடியாக இது குறித்து திரு.வி.க.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் பிரோவை சோதனை செய்தனர். அப்போது பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து தடயவியல் துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை பதிவுகளை எடுத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

 



 

வயதான முதியவரிடம் கவனத்தை திசை திருப்பி தங்க நகை மற்றும் பணம் பறிப்பு

 

சென்னை கொடுங்கையூர் வேளாங்கண்ணி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சந்தன பாண்டி வயது (58). இவர் மூலக்கடையில் உள்ள முத்தூட் பைனான்சில் இருந்து 3 சவரன் தங்க நகை மற்றும் 56,000 பணம் எடுத்துக் கொண்டு அவரது இரு சக்கர வாகனத்தில் மாதவரம் செங்குன்றம் நெடுஞ் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் கிளையின் முன்பு வண்டியை நிறுத்தி விட்டு ஸ்டேட் பேங்க் ATM ல் 30,000 பணத்தை டெபாசிட் செய்து விட்டு வெளியே வந்து  இரு சக்கர வாகனத்தின் டேங்க் கவரில் பையை வைத்துள்ளார்.

 



 

அப்போது மர்ம நபர் ஒருவர் முதியவரின் முதுகில் தட்டி பணம் கீழே கிடப்பதாக கூறியுள்ளார். கீழே கிடந்த பணத்தை எடுக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த மற்றோரு நபர் டேங்க் கவரில் வைத்திருந்த 26,000 பணம் மற்றும் 3 சவரன் நகை உள்ள பையை எடுத்துச் சென்று விட்டார். இது குறித்து முதியவர் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.