புதுச்சேரி உழவர்கரை தொகுதி சுயேச்சை சட்ட மன்ற உறுப்பினர் சிவசங்கரன். இவரது வீடு ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகர் முதல் குறுக்குத்தெருவில் உள்ளது. சிவசங்கரனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் தன்னை அமலாக்கத்துறை அதிகாரி எனக்கூறி அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ந்து அவரிடம் சிவசங்கரன் பேச்சு கொடுத்தார்.

Continues below advertisement

அப்போது அந்த நபர், நீங்கள் கடந்த 2 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார் வந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளார். அதற்கு அவரும், தாராளமாக விசாரித்துக் கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். பின்னர் அடுத்த சில நிமிடங்களில் சிவசங்கரன் வீட்டிற்கு டிப்-டாப் உடையில் ஒருவர் வீட்டிற்கு வந்தார்.

போலி அமலாக்கதுறை அதிகாரி - தர்மஅடி

Continues below advertisement

அப்போது சிவசங்கரனிடம் தன்னை அமலாக்கதுறை அதிகாரி எனவும், போனில் பேசியது நான் தான் எனவும் கூறினார். அதைத்தொடர்ந்து அவர், சிவசங்கரன் வருமானம் மற்றும் சொத்து விவரங்களை கேட்டுள்ளார். சந்தேகம் அடைந்த அவர், உடனே ரெட்டியார்பாளையம் போலீசுக்கு தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் போலீசார் வீட்டிற்கு வந்தனர். அதையடுத்து அந்த நபரிடம், போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அதையடுத்து அவரை அங்கிருந்தவர் தர்மஅடி கொடுத்து விசாரித்தனர். உடனே பயந்துபோன அந்த நபர் தான் அமலாக்கத்துறை அதிகாரி இல்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் வடக்குப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் பக்தவச்சலம், காவல் ஆய்வளர்  ஜெய்சங்கர் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த நபர், சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரை சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் (வயது35) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளிவந்தது.

தலா ரூ.1 லட்சம் லஞ்சம் தரவேண்டும் என பேரம்

அதாவது சிவசங்கர் சட்ட மன்ற உறுப்பினர் வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக முதலில் கருவடிக்குப்பம் மகாவீர் நகரில் உள்ள காலாப்பட்டு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் வீட்டிற்கும் சென்று அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், 2வதாக லாஸ்பேட்டை சாந்தி நகரை சேர்ந்த காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் வைத்தியநாதன் வீட்டிற்கும் சென்று பண பரிவர்த்தனை மோசடியில் செய்வதாக புகார் வந்ததாக கூறியும், அந்த தவறை மறைக்கவும், உயர் அதிகாரிகளை சரிகட்டவும் 2 சட்ட மன்ற உறுப்பினர்க்களிடம் தலா ரூ.1 லட்சம் லஞ்சம் தரவேண்டும் எனவும் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால் இருவரும் பணம் கொடுக்கவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை சட்ட மன்ற உறுப்பினர் நேரு செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு தன்னை அமலாக்க துறை அதிகாரி எனக்கூறி பேசியுள்ளார். மேலும் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமாரிடம் போனில் பேசி பணம் கேட்டுள்ளார். அதற்குள் அந்த நபர் போலீசில் சிக்கிக்கொண்டார். போலீசின் பிடியில் சிக்கியுள்ள சென்னை திருவொற்றியூரை சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் புதுவையில் இதுபோல் வேறுயாரிடமும் அமலாக்கதுறை அதிகாரி எனக்கூறி பணம் பறித்துள்ளாரா? இதில் அவரை தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தினார்கள். புதுவையில் அமலாக்கத்துறை அதிகாரி எனக்கூறி நடித்து 4 சட்ட மன்ற உறுப்பினர்க்களிடம் பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.