அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜான். இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இவரது மகன் அகஸ்டின் (58). இவரது மனைவி ஷீலா (53). தந்தையின் முதுமை காரணமாக, அவரை கவனித்துக்கொள்ள அரும்பாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த 50 வயதான வளர்மதி என்பவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். இவர் கடந்த 15 வருடங்களாக அகஸ்டின் வீட்டில் வேலை செய்து வருகிறார். வளர்மதிக்கு 19 வயது சுமித்ரா என்ற பெண் உள்ளது. 


இந்தநிலையில், கடந்த 3ம் தேதி வீடு கட்டுவதற்காக சாலிகிராமத்தில் உள்ள தனது தந்தையின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க அகஸ்டின் சென்றார். அப்போது அவரது வங்கி கணக்கில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் பிப்ரவரி வரை சுமார் 12 லட்சம் பணமானது வேறு வங்கியில் பரிவர்த்தனை செய்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது பற்றி, அகஸ்டின் வங்கி ஊழியர்களிடம், அரும்பாக்கம் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். 


அதன்படி, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த பணமானது கே.கே.நகர் சிவலிங்கபுரம் தெருவை சேர்ந்த 31 வயதான சதீஷ்குமார் என்பவர் வங்கி கணக்குக்கு 12 லட்சம் பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்தது.


இதுகுறித்து மீண்டும் அகஸ்டினிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, வளர்மதி வேலைக்கு வரும்போது அவரது மகள் சுமித்ராவையும் அழைத்து வருவது வழக்கம் என்றும், அவ்வபோது சுமித்ரா, ஜான் மற்றும் ஷீலாவின் செல்போன்களை பயன்படுத்துவார் என தெரிவித்துள்ளார். இது குறித்து, வளர்மதியிடம் விசாரணை நடத்தினர்.


அதில், சுமித்ரா, ஜானின் செல்போனில் இருந்து அவருக்கு தெரியாமல் 12 லட்சத்தை தனது காதலன் சதீஷ்குமார் வங்கி கணக்குக்கு அனுப்பியதும், பின்னர் காதலனுடன் தலைமறைவானதும் தெரியவந்தது. அவர்களது செல்போன் சிக்னல் மூலம் பாண்டிச்சேரியில் சைபர் க்ரைம் காவல்துறையினர் நேற்று முன் தினம் மாலை காதல் ஜோடியை மடக்கி பிடித்து அவர்களை அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.


அதில்,சுமித்ரா தனது தாய் வேலை செய்த வீட்டு உரிமையாளர் வங்கி கணக்கில் இருந்து சதீஷ்குமாருக்கு பரிவர்த்தனை செய்த பணத்தில் சொகுசு பைக், 3 சவரன் செயின், ஒரு லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 4 செல்போன்களை வாங்கி கொடுத்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 90 ஆயிரம், பைக், 3 சவரன் செயின் மற்றும் 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவரையும் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சதீஷ்குமாரை சைதாப் பேட்டை கிளைச்சிறையிலும், சுமித்ராவை புழல் மகளிர் சிறையிலும் அடைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண