அம்பத்தூர் புதூரில் நகைக் கடைகளில் கவரிங் நகையை மாற்றி வைக்க முயற்சி செய்தவரை ஊழியர்கள், பொதுமக்கள் மடக்கி பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் கே.கே.நகர் ரோடு, சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அம்பத்தூர் புதூர் பகுதியில் உள்ள பிரபல நகைக் கடைக்கு நகைகள் வாங்குவது போல் சென்றுள்ளார். அப்போது கடை ஊழியர்களிடம் இருந்து அசல் தங்க நகைகளை வாங்குவது போல் நடித்து யாரும் கவனிக்காத நேரத்தில் அசல் தங்க நகைகளுக்கு பதிலாக தன்னிடம் வைத்திருந்த போலி கவரிங் நகைகளை மாற்றி வைத்து திருட முயன்றுள்ளார்.
இதேபோல் அடுத்தடுத்து இரண்டு நகைக் கடைகளில் ஒரே பாணியில் திருட முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என நகைக்கடை உரிமையாளர் வெளியான சிசிடிவி காட்சி வீடியோவில் கூறுகிறார். இதனால் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் அவரை கண்காணித்துள்ளனர். அவரை அடையாளம் கண்ட நகைக்கடையின் உரிமையாளர் அவரிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில் நகை கடையில் இருந்து செல்வம் தப்பித்து ஓட முயற்சி செய்கிறார்.
பின்னர் நகைக்கடை ஊழியர் மற்றும் நகை வாங்க வந்திருந்த சிலர் உதவியுடன் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவரை அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக புதூர் போலீசார் செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர் இதற்கு முன்பு இதேபோன்று வேறு நகைக் கடைகளில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளாரா? அவருடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து இரண்டு நகைக் கடைகளில் ஒரே பாணியில் திருட முயன்ற சம்பவம் அம்பத்தூர் புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
