நடிகர் தனுஷைச் சுற்றிய பழைய தயாரிப்பாளர் பிரச்சினை மீண்டும் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர்களிடம் பெற்ற முன்பணம் தொடர்பான விவகாரத்தில் தனுஷ் அளித்திருந்த உறுதிமொழிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தனுஷ் மீது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Continues below advertisement

 

தயாரிப்பாளர்கள் முரளி ராமசாமி மற்றும் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ஆகியோருடன் தனுஷுக்கு ஏற்பட்டிருந்த நிதி மற்றும் கால்ஷீட் தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இரு தயாரிப்பாளர்களிடமும் தனுஷ் முன்பணம் பெற்றிருந்ததாகவும், அதற்குப் பதிலாக ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க கால்ஷீட் வழங்கப்படவில்லை என்றும் ஏற்கனவே புகார்கள் எழுந்திருந்தன.

Continues below advertisement

இந்த விவகாரம் கடந்த 2024ஆம் ஆண்டு தீவிரமடைந்த நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தனுஷின் புதிய படங்களின் பணிகளை தொடங்குவதற்கு முன்பு சங்கத்தை அணுக வேண்டும் என தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியது. இதனால் தனுஷின் படப்பிடிப்பு நடவடிக்கைகள் குறித்தும் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மற்றும் FEFSI உள்ளிட்ட அமைப்புகளின் தலையீட்டில் தனுஷ் தரப்புக்கும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த விவகாரம் அதன்பிறகும் முழுமையாக முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக, ஃபைவ் ஸ்டார் கதிரேசன் 2025ஆம் ஆண்டு மீண்டும் தனுஷின் கால்ஷீட் தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதனால் ஏற்கனவே தீர்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது.

தயாரிப்பாளர்களுக்கு தனுஷ் திருப்பி தருவதாக உறுதியளித்த தொகையை அவர் இதுவரை திருப்பி தராததால் தனுஷின் அடுத்த படப்பிடிப்பை தயாரிப்பாளர் சங்கம் தடுத்து நிறுத்துமா அல்லது இரு தரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவார்களா என்பது தமிழ் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓம் 

தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருக் அக்டோபர் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து தனுஷின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார்.