ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 7.695 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.


ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவது குறித்து முன்னதாக வான் நுண்ணறிவு பிரிவு (Air Intelligence Unit) அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.


அதன்படி முன்னதாக ஹைதராபாத் வந்திறங்கிய பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஏர் கம்ப்ரசருக்கு உள்ளே மறைத்து வைத்து கொண்டு வரப்பட்ட 4,895.000 கிராம் எடை கொண்ட 2 கோடியே 57 லட்சத்து 47 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பு கொண்ட தங்கம், துபாயிலிருந்து ஹைதராபாத் வந்த பயணியிடமிருந்து கைப்பற்றப்பட்டது.


அதேபோல் சுங்க வரியைத் தவிர்க்கும் நோக்கத்துடன் தன் செக்-இன் பேக்கேஜில் 1400 கிராம் மதிப்புள்ள 12 தங்கக் கட்டிகளை (24 காரட்) கடத்திச் செல்ல முயன்ற நபரிடமிருந்தும்  தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


முன்னதாக இதேபோல் மும்பை விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் மதிப்புடைய தங்கம் சாகக்லேட் மற்றும் டாஃபிகளுக்குள் வைத்து மறைத்து கடத்தி வரப்பட்ட சம்பவம் நடந்தது.


துபாயில் இருந்து வந்த விமானத்தில் 24 கேரட் தங்கம் 369.670 கிராம் கடத்தி வரப்பட்டது. சுங்கத் துறையினர்  தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் படி அந்தத் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதன் மதிப்பு மொத்தம் ரூ.18 லட்சத்து 89 ஆயிரத்து 14 ஆகும்.



 




துபாயில் இருந்து தங்கம் கடத்தி வரப்படும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. பொதுவாக வெளிநாடுகள் செல்லும் விமானங்கள் கிளம்பும்போது பயணிகளின் உடைமைகள் ஸ்கேன் செய்யப்படும்.



அப்போது எந்தப் பெட்டியில் தங்கம் உள்ளது என்பது தெரிந்துவிடும். அந்த விமானம் எந்த ஊருக்குச் செல்கிறது என்பதையறிந்து நுண்ணறிவுப் பிரிவுக்குத் தகவல் கொடுத்துவிடுவார்கள். அந்தவகையில் உளவுத்துறையின் தகவல் சரியாக இருந்தால், கடத்தல்காரர்கள் பிடிபடுவார்கள்.


அதேநேரம், விமான நிலைய சோதனையையும் மீறி 30 முதல் 40 சதவிகிதம் பேர் தப்பித்து விடுகின்றனர், பாதியளவு நபர்கள்கூட பிடிபடுவதில்லை என்றும் கூறப்படுகிறது.


தங்கத்துக்கு முறையான கணக்குகளைக் காட்டாவிட்டால் அரசின் கருவூலத்துக்கு அது சென்றுவிடும். பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் தங்கம், வைரம், வெளிநாட்டு கரன்ஸி ஆகியவற்றைக் கொண்டு சென்றால் காபிபோசா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.


இதை ஆங்கிலத்தில் conservation of foreign exchange and prevention of smuggling act எனக் கூறுகின்றனர். அந்நியச் செலாவணி மற்றும் கடத்தலைத் தடுக்கும் சட்டம் இது.


இதன் பேரில் பிடிபடுகிறவர்களை ரிமாண்ட் செய்ய முடியும். குண்டர் தடுப்புச் சட்டம் போலத்தான் இந்தச் சட்டம். பிணை என்பதே கிடையாது. வருவாய் புலனாய்வுத் துறை, சென்னை சுங்கத்துறை, மாநில அரசு ஆகியவற்றுக்கும் காபிபோசா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கு அதிகாரம் உள்ளது.