கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதே நிரம்பிய இளம் பெண் விஸ்மயா மர்மமான முறையில் தன்னுடைய கணவர் வீட்டில் இறந்திருந்தார். இவருடைய மரணத்திற்கு கணவர் கிரண் குமாரின் குடும்பம் தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. மேலும் கிரண் குமார் காவல்துறையினரிடம் சரண் அடைந்துள்ளார். 


இந்நிலையில் மேலும் 2 பெண்கள் தங்களுடைய கணவர் வீட்டில் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆலப்புழா மாவட்டத்தின் வள்ளிகுன்னம் பகுதியைச் சேர்ந்தவர் சுசித்ரா(19). இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் விஷ்ணுவிற்கும் கடந்த மார்ச் 21-ஆம் தேதி திருமணம் நடந்தது. இவர் உத்தரகாண்ட் பகுதியில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்தச் சூழலில் சுசித்ரா தனது மாமனார் மாமியார் உடன் வள்ளிகுன்னத்தில் வசித்து வந்துள்ளார். 





நேற்று காலை 8.30 மணிக்கு வழக்கம் போல் காலை உணவு சாப்பிட்டுவிட்டு சுசித்ரா தனது அறைக்கு சென்று கதவை பூட்டியுள்ளதாக தெரிகிறது. அதற்கு பின்பு அரைமணி நேரமாக வெளியே வராததால் மாமியார் சுலோச்சனா கதவை தட்டிப்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சுசித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலை மரணம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுசித்ராவின் தற்கொலைக்கு உரிய காரணம் இன்னும் தெரியவில்லை. 


இதேபோல் வெங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா(24). இவருக்கும் சுரேஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகும் நகை மற்றும் நிலம் ஆகியவை இன்னும் தரவேண்டும் என்று சுரேஷின் குடும்பத்தினர் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 




இதனால் அர்ச்சனா தன்னுடைய தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தச் சூழலில் கடந்த திங்கட்கிழமை அர்ச்சனாவை கணவர் சுரேஷ் தன்னுடைய வீட்டிற்கு சமாதானம் செய்து அழைத்து சென்றுள்ளார். அடுத்த நாளை காலையில் அர்ச்சனா தீ காயங்களுடன் மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்த தகவலை அறிந்த அர்ச்சனாவின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கணவர் சுரேஷை பிடிக்க வந்தபோது அவர் தப்பி ஓட முற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். தற்போது அவரிடம் இந்த மரணம் தொடர்பாக  விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் கடந்த சில நாட்களுக்குள் 3 பெண்கள் தங்களுடைய கணவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


குடும்ப வன்முறையா? உடனே இந்த எண்ணை அழையுங்கள்..


குடும்ப வன்முறையை சகித்துக் கொண்ட காலங்கள் ஓயட்டும். கணவராலோ, கணவரின் குடும்பத்தாராலோ உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால் உடனடியாக த்வானி என்ற அமைப்பின் ஹாட்லைன் எண்ணை 1800 102 7282 தொடர்பு கொள்ளுங்கள். அல்லது 1098 என்ற வுமன் ஹெல்ப்லைனில் அழையுங்கள். இது 24 மணிநேரமும் இயங்கக்கூடியது. இந்த ஹெல்ப்லைன் காவல்துறை, மருத்துவமனை அல்லது தேவைப்படும் உடனடி உதவியை செய்யக்கூடிய அதிகாரம் உள்ளவர்களை இணைக்கும். ஒருவேளை நீங்கள் இந்த எண்ணை அழைத்துவிட்டு பேசமுடியாமல் போனாலோ அல்லது உங்களது அழைப்பை யாரேனும் துண்டித்துவிட்டாலோ கூட வுமன் ஹெல்ப்லைன் உங்களை மீண்டும் தொடர்புகொள்ளும். ஹெல்ப்லைன் ஊழியர்கள் உங்களைப் பற்றிய ரகசியம் காப்பர்.