தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் நைரா ஷா. இவர் தமிழில் மிருகா எனும் படத்திலும் நடித்திருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் மும்பை ஜுஹு பகுதியில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அந்தப் பார்ட்டியில் அவருடைய காதலர் என கிசுகிசுக்கப்படும் ஆஷிக் சஜித் ஹுசைன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.




இரவு நீண்ட நேரம் பார்ட்டி நீடித்துள்ளது. பின்னர், மற்றவர்கள் சென்றுவிட நைராவும் ஆஷிக்கும் தனியறைக்குச் சென்றுள்ளனர். இதற்கிடையில் பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸார் அங்கு செல்ல அதற்குள் மற்றவர்கள் பார்ட்டியை முடித்துவிட்டு கம்பி நீட்டியிருந்தனர். சற்றே ஆறுதலாக போலீஸாருக்கு நைராவும் அவரது நண்பரும் மட்டும் அறையில் தங்கியிருந்தது தெரியவந்தது. உடனே அறைக்குச் சென்ற போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.


Parvathy Apologises | பாலியல் குற்றவாளியின் பதிவுக்கு 'லைக்' - மன்னிப்புக் கோரிய பார்வதி!


புகை சூழ்ந்திருந்த அந்த அறையில் இருவருமே சிகரெட்டும் கையுமாக இருக்க போலீஸார் அந்த சிகரெட் குறித்து துருவிதுருவி விசாரித்தனர். அப்போதுதான், அந்த சிகரெட்டில் சரஸ் என்ற போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியானது. இதையடுத்து போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர்  நடிகையும் அவரது காதலரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.




பாலிவுட்டும் போதைப் பொருளும்..


நடிகை, நடிகர்கள் போதைப் பொருள் பயன்படுத்தி சிக்குவது மும்பையில் அதுவும் பாலிவுட்டில் மிகவும் பிரபலம். அண்மையில், சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை விவகாரம் பாலிவுட்டில் கலந்திருந்க்கும் போதைப்பொருள் பயன்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில், சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி, அவரது தம்பி சோவிக் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். பாலிவுட் நடிகர் அஜாஸ் கான் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.


தொட்டுதொட்டு நீண்ட போதைப்பொருள் பயன்பாட்டு வழக்கில் தீபிகா படுகோனே வரை விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2017ம் ஆண்டு போதைப் பொருள் குறித்து விவாதிப்பதற்காகவே பாலிவுட் பிரபலங்கள் வட்டத்தில் இயங்கிய வாட்ஸ்அப் குழுவிற்கு தீபிகா படுகோன் அட்மினாக இருந்ததாக வெளியான தகவலின் அடிப்படையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரிடம் 6 மணி நேரம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில்  தீபிகா படுகோனே அழுததாக தகவல் வெளியானது.


சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோருக்கும் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு சம்மன் அனுப்பி விசாரித்தது.  நைரா, மிருகா படத்தில் ராய் லட்சுமிக்கு தங்கையாக நடித்திருந்தார். அதில் அவரது நடிப்பு பேசும் படியாக இருந்தது.