திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா மரியநல்லூர் கிராமம் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புண்ணியகோட்டி வயது (40),இவர் தொழிலாளி. மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புண்ணியக்கோட்டியை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகள் தொடர்பான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.


 




 


இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புண்ணியகோட்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


பண மோசடி:


திருவண்ணாமலை தேரடி தெருவை சேர்ந்தவர் பாபு இவர் திருவண்ணாமலையில் டிராவல்ஸ் நடத்தி வரும் ராமலிங்கனார் தெருவை சேர்ந்த அண்ணாமலை வயது (42) என்பவருடன் தொழில் ரீதியாக பழக்கம் இருந்து வந்துள்ளனர்.


இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சலுகை விலையில் புதிதாக கார் வாங்குவதற்காக அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், அதனை 2 மாதத்தில் திருப்பி கொடுத்து விடுவதாகவும் கூறி பாபுவிடம் இருந்து ரூபாய் 6 லட்சத்தை அண்ணாமலை கடனாக பெற்றுள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் அண்ணாமலை பணத்தை திருப்பி கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். மேலும் தொடந்து பணத்தை பாபு கேட்டு வந்ததால் அண்ணாமலை 6 லட்சத்திற்கான வங்கி காசோலையை பாபுவிடம் வழங்கியுள்ளார்.


 




ஆனால் அண்ணாமலையின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் அந்த காசோலை திரும்ப வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதால் அண்ணாமலை மீது நவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாபு திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் புகார் மனு அளித்தார். இந்த மனு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் நடைபெற்றது. இவ்வழக்கை நீதிபதி கவியரசன் விசாரணை நடத்தினர். இதில் பணத்தை பெற்று கொண்டு அண்ணாமலை திருப்பி கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்தது அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட அண்ணாமலைக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.