சேலம் மாநகர் ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். பிரபல ரவுடியான இவர் மீது திருட்டு, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. அவருடைய மனைவி மலர். இவர்களுக்கு சாய்லாராஸ்ரீ என்ற மகள் உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வழிப்பறி வழக்கு ஒன்றில் பரசுராமனை அஸ்தம்பட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். ஜான்சன்பேட்டையை சேர்ந்தவர் சின்னதம்பி, பிரபல ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி, சாராய விற்பனை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல்நிலையங்களில் பதிவாகி நிலுவையில் உள்ளன. பரசுராமனும், சின்னதம்பியும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம் எனக் கூறப்படுகிறது. அதேபோல் நேற்று காலையும் அவர்கள் 2 பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்திவிட்டு சுற்றி திரிந்துள்ளனர். பிற்பகலில் சின்னதம்பியிடம், பரசுராமன் மீண்டும் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்துவிட்டு தனது வீட்டுக்கு வந்தார். ஆனால் பரசுராமன் விடாமல் பணம் கேட்டு சின்னதம்பி வீட்டுக்கே சென்றார்.



இதுதொடர்பாக அவர்களிடையே அங்கு திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சின்னதம்பி அங்கு கிடந்த செங்கலை எடுத்து பரசுராமனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி ரோட்டில் கீழே விழுந்துள்ளார். பின்னர் சின்னதம்பி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பரசுராமனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். மேலும் அவரது முகத்தில் சில இடங்களில் கத்தியால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பரசுராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பரசுராமன் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட பரசுராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். கொலை நடந்த இடத்துக்கு தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதனிடையே அந்த பகுதியில் சுற்றி திரிந்த சின்னதம்பியை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சேலத்தில் பிரபல ரவுடியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.