சேலம் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே செல்லும் கைதிகளின் பின்புலம் குறித்து உளவுப் பிரிவினர் ரகசியமாக கண்காணிப்பார்கள். கைதி ரவுடியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வெளியே செல்லும்போது அந்தந்த காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். இதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி பகுதியில் சேர்ந்த பிரபல ரவுடி தணிகைவேல் கடந்த 2018 ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் காசியில் தலைமறைவாக இருந்த போது, காஞ்சிபுரம் காவல்துறையினர் காசி சென்று தணிகை வேலை கைது செய்து விமான மூலமாக அழைத்து வந்தனர். அப்போது தணிகை வேலை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்கிருந்து சேலம் மத்திய சிறையில் தணிகை‌வேல் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் இன்று தணிகை வேலுக்கு ஜாமீன் கிடைத்தது.



இதன்படி இன்று ஜாமீன் கிடைத்ததால் மீண்டும் சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு செல்வதற்கு சேலம் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் காஞ்சிபுரம் காவல் துறையினர் மற்றொரு வழிப்பறி வழக்கு ஒன்றில் மீண்டும் கைது செய்து காஞ்சிபுரம் அழைத்துச் சென்றனர். இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜாமீன் கிடைத்துவிட்டது வீட்டிற்கு செல்லலாம் என்று மகிழ்ச்சியுடன் வெளியே வந்த ரவுடி மீண்டும் சிறைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.


இதேபோன்று கடந்த ஜூன் மாதம் 7 ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் சிவகாஞ்சி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது வாரண்ட் இருப்பதையடுத்து தனிப்படையினர் அவரை கைது செய்ய 3 நாட்களுக்கு முன்பே சேலம் மத்திய சிறைக்கு வந்தனர். வழக்கமாக சிறையின் நுழைவாயில் அருகில் உள்ள மரத்தடியில் நிற்பார்கள், உள்ளே இருந்து வெளியே வரும்போது அவர்களை கைது செய்து அழைத்துச் செல்வது வழக்கம். அதன்படி சிவகங்கை தனிப்படையினர் ரவுடிக்காக காத்திருந்தனர். அப்போது சிறை அதிகாரி ஒருவர், அங்கிருந்த தனிப்படையினரிடம், இங்கு வைத்து யாரையும் கைது செய்யக்கூடாது, ரோட்டுக்கு வெளியே நில்லுங்கள் என்று கூறி அனுப்பினார். இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் ரோட்டுக்கு வெளியே காத்திருந்தனர். காலை 11 மணியில் இருந்து 2 மணி வரை காத்திருந்தும் ஒரே ஒரு முதியவர் மட்டுமே சிறையிலிருந்து வெளியே வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை காவல்துறையினர், சிறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனிப்படையினர் தேடி வந்த ரவுடி 11.30 மணிக்கே சென்றுவிட்டாரே என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தனிப்படை காவல்துறையினர், சிறையில் இருந்து வெளியே வருவதற்கு ஒரே பாதைதான் இருக்கிறது. இந்தவழியாக செல்லவில்லையே என கேட்டுள்ளனர்.



தொடர் விசாரணையில் சிறை அதிகாரிகள் ரவுடியை வேறு வழியாக தப்பிக்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். வழக்கமாக மெயின் கேட் வழியாக கைதிகள் வெளியே வருவார்கள். ஆனால் இந்த ரவுடிக்கு மட்டும் சிறை காம்பவுண்ட்சுவரில் இருக்கும் கேன்டீன் ஷட்டரை திறந்து வெளியே அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த முறை காஞ்சிபுரம் காவல் துறையினர் பத்துக்கும் மேற்பட்டோர் தணிகைவேலுவை சேலம் மத்திய சிறை நுழைவு வாயிலில் கைது செய்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண