புதுச்சேரி: 500 வங்கிக் கணக்குகளில் இருந்து ஆன்லைனில் ரூ.90 கோடி மோசடி செய்தது தொடா்பாக சென்னையை சேர்ந்த கணேஷ் உடள்பட 7 பேரை கைது செய்து புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

Continues below advertisement

500 வங்கிக் கணக்குகள் மூலம் ₹90 கோடி அளவில் ஆன்லைன் மோசடி

புதுச்சேரி மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சுமார் 500 வங்கிக் கணக்குகள் மூலம் ₹90 கோடி அளவில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக, சென்னையைச் சேர்ந்த கணேஷ் உட்பட 7 பேரை புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர். இந்தக் குற்றவாளிகள் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள இணையவழி குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது, இது நாட்டின் எல்லைகளைத் தாண்டிய மிகப்பெரிய மோசடிச் சங்கிலியை வெளிப்படுத்தியுள்ளது

இது குறித்து சைபர் கிரைம் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

Continues below advertisement

புதுச்சேரியில் தனியாா் பொறியியல் கல்லூரியில் படிக்கும் தினேஷ், ஜெயபிரதாப் இருவரும் தங்கள் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுடன் படிக்கும் மாணவா் ஹரிஷ் 6 மாதங்களுக்கு முன்பு வங்கிக் கணக்கையும், சிம் காா்டுகளையும் வாங்கியதாகவும் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த வங்கி கணக்குகளை ஆராய்ந்தபோது, அவை மேற்கு வங்கம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் மாநிலங்களில் முடக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அதே கல்லுாரியில் படிக்கும் மாணவரான கடலுாரை சேர்ந்த ஹரிஷ் (21), கடந்த 6 மாதங்களுக்கு முன் ஒரு வங்கி கணக்குக்கு தலா ரூ.2,500 தருவதாக கூறியதாகவும், பணத்துக்கு ஆசைப்பட்டு ஹரிஷிடம் வங்கி கணக்கு தொடங்கியதோடு, சிம் கார்டு வாங்கி கொடுத்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஹரிஷிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் இந்த இருவா் மட்டுமின்றி 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள், பொதுமக்களிடம் வங்கிக் கணக்கைப் பெற்றுக் கொண்டு ஒரு வங்கிக் கணக்குக்குக் ரூ.1,500 வீதம் பெற்றுக் கொண்டு புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந்த கோவிந்தராஜிடம் கொடுத்ததாகக் கூறினாா்.

அதன்பேரில், போலீஸாா் கோவிந்தராஜை கைது செய்து விசாரித்தபோது, அவர் சென்னையில் கணேஷ் (33) என்பவரை சுட்டிக் காட்டி அவரிடம் வங்கி கணக்குகளை ஒப்படைக்கும் வேலையை செய்து வந்ததாகவும், கணேஷ் கொடுக்கும் ஏடிஎம்.கார்டுகளை பயன்படுத்தி நாள்தோறும் ரூ.4 முதல் ரூ.10 லட்சம் வரை பணம் எடுத்து கொடுத்து வந்துள்ளார். கடந்த 8 மாதத்தில் ரூ.8 கோடி வரை ஆன்லைன் மோசடி மூலம் பணம் எடுத்து கொடுத்துள்ளதாக கூறினார்.

இதையடுத்து கணேஷை போலீஸாா் சென்னையில் கைது செய்தனா். மேலும், அவா் அளித்த தகவலின் அடிப்படையில் புதுச்சேரி, அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த யஷ்வின்(20), கடலுார், நடுவீரப்பட்டை சேர்ந்த ஐயப்பன்(24), சென்னை, அண்ணா நகரை சேர்ந்த தாமஸ் (29) (எ) ஹயக்ரீவா, கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராகுல்(23) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட இவா்களிடமிருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், நூற்றுக்கணக்கான வங்கி கணக்குப் புத்தகங்கள், 20 கைப்பேசிகள், கணினி, 2 லேப்-டாப், சிம் காா்டுகள், 75 ஏடிஎம் கார்டுகள், பணம் எண்ணும் இயந்திரம் 1, 12 க்யூஆா் ஸ்கேனா், போலி நிறுவன முத்திரைகள், காா் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவா்களின் 251 வங்கிக் கணக்குகளை ஆராயப்பட்டது.

இந்தியா முழுவதும் 89 புகாா்கள் பதிவாகியுள்ளது தெரிய வந்தது. மேலும், ரூ.90 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. மோசடியாக பெற்ற பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி சீனா, அயர்லாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அனுப்பி, நாடுகளுக்கு டிஜிட்டல் டாலராகவும் இவா்கள் பணப் பரிமாற்றம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா் செய்யப்பட்டு புதுச்சேரி மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை இரவு அடைக்கப்பட்டனா் என இணையவழி குற்றப்பிரிவு போலீஸ் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் கூறினார்.