திருவள்ளூர் மாவட்டத்தில் தந்தை படிக்கச் சொல்லி திட்டியதால் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது மனைவி கற்பகம் மற்றும் மகள் பிரதிக்‌ஷாவுடன் வசித்து வந்தார். பிரதிக்‌ஷா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் தனக்கென அக்கவுண்ட் வைத்திருக்கும் பிரதிக்‌ஷா அதில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருவது வழக்கமாம். இதனால் அவரது நண்பர்கள் வட்டத்தில் இன்ஸ்டா குயின் என அவர் அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 


இதனிடையே நேற்று இரவு தேர்வுக்கு படிக்காமல் அச்சிறுமி தனது பாட்டி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த கிருஷ்ணமூர்த்தி மகளை படிக்கச் சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் பெற்றோர் இருவரும் வெளியே சென்றுவிட்டனர். வீட்டின் சாவி பிரதிக்‌ஷாவிடம் இருந்த நிலையில் விளையாடி முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.


1 மணி நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பிய பெற்றோர் வீட்டின் கதவை தட்டியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. பிரதிக்‌ஷாவின் பெயரை அழைத்து பார்த்தபோதும் கதவு திறக்கப்படாததால் பயந்துபோன கிருஷ்ணமூர்த்தி படுக்கை அறை ஜன்னலை உடைத்து பார்த்துள்ளார். அப்போது அங்குள்ள ஜன்னல் கம்பியில் பிரதிக்‌ஷா தூக்கிட்டு  கொண்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர்.


உடனடியாக வீட்டின் மாடி வழியாக உள்ளே சென்று படுக்கை அறை கதவை உடைத்து சிறுமியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் 1 மணி நேரமாக தீவிர சிகிச்சை அளித்தும் பிரதிக்‌ஷா உயிரை காப்பாற்ற முடியவில்லை. இதனிடையே இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பிரதிக்‌ஷாவின் வீட்டுக்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.


இதில் கட்டில் மெத்தையின் மேல் சிறிய சேர் போட்டு அதன் மீது ஏறிய பிரதிக்‌ஷா துண்டை ஜன்னல் கம்பியில் கட்டி தூக்கிட்டுள்ளார். ஆனால் துண்டு கழுத்தை முழுவதும் இறுக்காமல் இருந்ததால் கிருஷ்ணமூர்த்தி வந்த பார்த்தபோது உயிருக்கு போராடி கொண்டிருந்தததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)