திருப்போரூர் அருகே தொழிலதிபருடன் இளம் பெண்ணை பழக வைத்து பணம் பறித்த சம்பவத்தில் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கானகோயில்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (40) தொழிலதிபராவர். இவர் மகேந்திரா சிட்டி பகுதிகளில் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சேர்த்துவிடும் பணியை மேற்கொண்டு வருகிறார். 


இந்த நிலையில், இவர் பல்வேறு தொழிலாளர்களின் பி.எப். பணத்தை அவர்களின் 'கணக்கில் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, தொழிலாளர்கள் சிலர் அஞ்சூரை சேர்ந்த பிரபாகரன் (32), அம்மணம்பாக்கத்தை சேர்ந்த கன்னியப்பன் (26) ஆகியோரிடம் தெரிவித்தனர்.


மேலும், இது குறித்து அவர்கள், தங்கள் நண்பரான திருப்போரூர் அடுத்த மேட்டுத்தண்டலம் பகுதியை சேர்ந்த பிரசன்ன பாலாஜி (36) என்பவரிடம் கூறி அவர் பெரிய தொழில் அதிபர் என்றும், அவரிடம் மேலும் பணம் பறிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.


இதையடுத்து பிரசன்ன பாலாஜி வடகடம்பாடியை சேர்ந்த அழகு கலை நிபுணர் ரஞ்சிதா (24) என்பவரிடம் கூறி பாஸ்கரின் செல்போன் எண்ணை கொடுத்து அவரிடம் நட்பாக பழகும்படி கூறி உள்ளனர். அதன்படி, ரஞ்சிதாவும் பாஸ்கரிடம் அடிக்கடி செல்போனில் பேசி ஆசை வார்த்தைகளை கூறி பழகத் தொடங்கி உள்ளார். மேலும் இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல இடங்களுக்கு ஒன்றாக சென்று உள்ளனர். கடந்த 27-ந்தேதி பாஸ்கரை செல்போனில் அழைத்த ரஞ்சிதா உனக்காக சென்னேரி பகுதியில் காத்திருக்கிறேன். என்னை வந்து அழைத்து செல் என்று கூறியுள்ளார்.


பாஸ்கரும் தனது மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று ரஞ்சிதாவை அழைத்துக் கொண்டு சிறுங்குன்றம் வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருவரும்பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது காரில் வந்த பிரசன்ன பாலாஜி, பிரபாகரன், கன்னியப்பன் ஆகியோர் அங்கு சென்று பாஸ்கரிடம் இருந்த 2 செல்போன்கள் ரூ.28 ஆயிரம் பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். மேலும், இதை வெளியே சொன்னால் அந்த பெண்ணுடன் இருந்த வீடியோ, போட்டோக்களை வெளியிடுவோம் என்று மிரட்டி விட்டு தப்பிச்சென்றனர். இதையடுத்து அங்கிருந்து வந்த பாஸ்கர் இது குறித்து திருப்போரூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.


இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரசன்ன பாலாஜி, ரஞ்சிதா பிரபாகரன், கன்னியப்பன் ஆகியோரை கைது செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர் அவர்களிடமிருந்து ஒரு கார், ஒரு மோட்டார் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.