சென்னை புறநகர் பகுதியாக இருக்கும் பல்லாவரம், வெள்ளிக்கிழமை சந்தைக்கு மிக பிரபலம். ஏராளமான பொருட்கள் இந்த பகுதியில் விற்கப்படும் என்பதால், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியை சேர்ந்த பலர் இந்த பல்லாவரம் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், பல்லாவரம் சந்தையில் கள்ளத்தனமாக 'கஞ்சா எண்ணெய்' விற்ற இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 

கள்ளத்தனமாக கஞ்சா ஆயில்

 

சென்னை புறநகர் பகுதியில் நாளுக்கு நாள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம் ,பல்லாவரம், குரோம்பேட் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் நபர்களை குறி வைத்து இந்த கஞ்சா போதை பொருள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பல்லாவரம் சந்தையில் கள்ளத்தனமாக கஞ்சா ஆயில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, தாம்பரம் மதுவிலக்கு ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது.

 

தகவலின் அடிப்படையில் பல்லாவரம் சந்தையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை நிருத்தி காவல் துறையினர் விசாரித்துள்ளனர். அப்போது, அந்த இளைஞர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

 



 

350 மில்லி லிட்டர் கஞ்சா ஆயில்

 

இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர்கள், இளைஞர்களை சோதனை செய்தனர். சோதனையில், இளைஞர்களின் வாகனத்தில் இருந்து 35 பாட்டில்களில் 350 எம்எல் கஞ்சா ஆயில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரித்திக் (22), சிஐடி நகரைச் சேர்ந்த ராகவன் (22) என்பது தெரியவந்துள்ளது. இருவரும் கல்லூரி மாணவர்கள் என விசாரணையில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

 

இதில், ரித்திக் கடந்த ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று வந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரிடம் இருந்தும் வாகனம் மற்றும் கஞ்சா ஆயிலை மது விலக்கு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இளைஞர்கள் இருவரையும் பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

"10 மில்லி லிட்டர் 3000"

 

சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் இருவரும், தங்களுடைய அன்றாட செலவுக்கும், மகிழ்ச்சியாக காலத்தை கழிப்பதற்கும், முக்கிய வியாபாரியின் கீழ் செயல்பட்டு வந்தது தீவிர விசாரணையில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

 

படப்பை பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா மற்றும் கஞ்சா ஆயில் வியாபாரி ஒருவர் இவர்களுக்கு இந்த ஆயுளை கொடுத்து உள்ளார். இவர்களும் 10 மில்லி லிட்டர் ஆயிலை 3000 ரூபாய் வரை விற்பனை செய்துவந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. படப்பை சேர்ந்த அந்த வியாபாரி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையை செய்து வருகின்றனர்.