தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான T-87 எண் கொண்ட பேருந்து , காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஓட்டுநர் சுப்பிரமணி மற்றும் நடத்துனர், சாரங்கன் மற்றும் சில பயணிகளுடன் கண்ணன்தாங்கள் கிராமத்திற்கு  செல்லும் வழியில், காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் சந்திப்பு வளைவில் திரும்பிய போது போக்குவரத்து நெரிசலால் நின்றிருக்கிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் பேருந்தினை மடக்கி ஆர்ன் அடித்தால் வழிவிட முடியாத என கேட்டிருக்கின்றனர்.



 

மேலும் ஓட்டுநரை தகாத வார்த்தைகளால், பேசிய நிலையில் , நடத்துனர் அந்த மூன்று  இளைஞர்களுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில், வைத்திருந்த பட்டாக்கத்தியை கொண்டு பேருந்தின்   முன்பக்க கண்ணாடி மீது, பட்டதால் பேருந்து ஓட்டுநர் அச்சத்திலேயே அதிர்ந்து போனார். இதனை அடுத்து பேருந்தில் இருந்த, பயணிகள் அனைவரும் அச்சத்தில் கதறி பேருந்து விட்டு இறங்கி ஓடியுள்ளனர். அதற்குள் அப்பகுதியில் பொதுமக்கள் குவிந்ததால் அந்த போதை இளைஞர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.



 

இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில்,  அதன் மூலம் சிவ காஞ்சி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு அரசு போக்குவரத்து கழக, பணிமனை மேலாளர் வந்து, ஓட்டுனரிடம் நடந்த விவரங்களை கூறி பேருந்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றார். காலை‌ வேளையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான பூக்கடை சத்திரம் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றதும் காலையில், கத்தியுடன் ரவுடிகள் உலா வந்ததும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை துவங்கிய போது, மூன்று இளைஞர்களும் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்தது தெரியவந்தது. வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் 3  இளைஞர்களின் , சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சிசிடி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் அந்த மூன்று இளைஞர்களை 20 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

 



 

மூன்று பேர் மீது, அடிதடி, கொலை மிரட்டல், கொலை முயற்சி ,அரசு பொது சொத்தை சேதப்படுத்தியது , பொதுமக்கள் கூடும் இடத்தில் பொது மக்களுக்கு அச்சம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, காஞ்சிபுரம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சரவணன், தியாகராஜன், மற்றும் சிவா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இவர்களில் சரவணன், மற்றும் தியாகராஜன் ஆகிய இருவர் மீது ஏற்கனவே குற்றப் பின்னணி உள்ளது குறிப்பிடத்தக்கது. சரவணன் இந்த சம்பவத்தில் பயன்படுத்திய பட்டாக்கத்தி, கேரளாவிற்கு சென்று திரும்பி வரும்பொழுது வாங்கி வந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. விரைவாக குற்றவாளிகளை பிடித்த காவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.