கர்நாடக மாநிலம், ஆந்திரா மாநிலம், புதுவை மாநிலம் செல்லும் முக்கிய வழியாக திருவண்ணாமலை உள்ளது. இந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்றால் திருவண்ணாமலை வழியாக செல்லமுடியும் இந்த பகுதிகளுக்கு அதிக அளவில் அரசு பேருந்துகளும், தனியார் சொகுசு பேருந்துகளும் அதிக அளவில் இயங்கி வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலமாக வெளிமாநில மதுபானங்கள், குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் திருவண்ணாமலை-செங்கம் செல்லும் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.


 




அப்போது கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த அரசு பேருந்தை சோதனை செய்தனர். அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த நபர்களின் பைகளை சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண்ணின் பையில் கர்நாடகா மாநில மதுபான பாட்டில்களை கடத்தி வருவது தெரிந்தது. அதன் பிறகு அந்த பெண்ணை காவல்துறையினர் கீழே இறக்கி விசாரணை நடத்தி அப்போது அந்த பெண் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மல்லிகா வயது (36) என்பவர் தெரியவந்தது. இவர் கள்ளக்குறிச்சி பகுதிக்கு எடுத்து சென்று அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருவாராம். இதனையடுத்து மல்லிகாவை காவல்துறையினர் கைது செய்து மல்லிகாவிடம் இருந்த கர்நாடக மாநில 200 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 


 




 


அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அதே பகுதியில் வாகன தணிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக கர்நாடகாவில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேளாங்கண்ணி நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சொகுசு பேருந்தை சோதனை நடத்தினர். அப்போது அந்த சொகுசு பேருந்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் தனியார் பேருந்தின் ஓட்டுநர் விருதாச்சலம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் வயது (54), நாமக்கல்லை சேர்ந்த மனோகரன் வயது (52) ஆகிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 31 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி குட்கா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட தனியார் சொகுசு பேருந்தை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.