ஆய்வாளர் வீட்டில் கொள்ளை

 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்த பாசிங்காபுரம் பகுதியில் உள்ள மீனாட்சி நகரில் வசித்து வருபவர் ஷர்மிளா - உதயக் கண்ணன் தம்பதியினர். ஷர்மிளா திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

 

கணவர் உதயக்கண்ணன் என்பவர் 30 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் பெட்ரோலியம் துறையில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார் தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளார். கணவர் கத்தாரில் பணிபுரிந்து வரும் நிலையில்., மகன் சென்னை தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் காவல் ஆய்வாளர் ஷர்மிளா கடந்த எட்டாம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது தந்தை வீட்டிற்கு மகளுடன் சென்றுள்ளார். இந்த நிலையில் தனது தந்தை வீட்டில் இருந்தே தினமும் காவல் நிலையம் சென்று வந்த நிலையில்., நேற்று பணி முடிந்து நள்ளிரவு தனது வீட்டிற்கு வந்த ஷர்மிளா வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பணம் மற்றும் நகை கொள்ளை


அதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 250 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்க பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தவுடன் உடனடியாக அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் போலீசார் சர்மிளாவின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

 

மேலும், காவல் ஆய்வாளர் ஷர்மிளா வீட்டில் சிசிடிவி கேமராக்கள் ஆங்கங்கே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 10 நாட்களாக அவரது வீட்டில் மர வேலை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 10 நாட்களாக செயல்படவில்லை என புகாரில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

250 பவுன் நகை


காவல் ஆய்வாளர் ஷர்மிளா அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் தன்னுடைய வீட்டில் இருந்த 250 பவுன் தங்க நகை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக தனது புகாரில் தெரிவித்து இருக்கிறார். கொள்ளையர்களைப் பிடித்த பின்பு எவ்வளவு பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரியவரும் என காவல் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். காவல் ஆய்வாளர் ஷர்மிளா வீட்டில் 250 பவுன் மட்டுமே கொள்ளை போகியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மொத்தம் 450 பவுன் இருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது. எனவே முழு விசாரணை முடிந்த பின்னர் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்றனர்.