கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதே நிரம்பிய இளம் பெண் விஸ்மயா மர்மமான முறையில் தன்னுடைய கணவர் வீட்டில் இறந்திருந்தார். இவருடைய மரணத்திற்கு கணவர் கிரண் குமாரின் குடும்பம் தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. மேலும் கிரண் குமார் காவல்துறையினரிடம் சரண் அடைந்துள்ளார்.  மேலும் 2 பெண்கள் தங்களுடைய கணவர் வீட்டில் இறந்தனர். ஆலப்புழா மாவட்டத்தின் வள்ளிகுன்னம் பகுதியைச் சேர்ந்தவர் சுசித்ரா(19) இவருக்கும் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் விஷ்ணுவிற்கும் திருமணம் நடைபெற்றது. 


இந்நிலையில் இந்த மரணம் தொடர்பாக சுசித்ராவின் தாய்,தந்தை மற்றும் அவரது உறவினர்கள் சுசித்ராவிற்கு நடந்த கொடுமை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி சுசித்ரா மற்றும் விஷ்ணு என்ற இருவருக்கும் கடந்த மார்ச் 21-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது சுசித்ராவின் குடும்பம் 51 சவரன் நகை மற்றும் ஒரு கார் வாங்கி கொடுத்துள்ளனர். எனினும் விஷ்ணுவின் குடும்பத்தினர் 10 லட்சம் ரூபாய் ரொக்கமாக கேட்டு சுசித்ராவிற்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 




இதுகுறித்து சுசித்ராவின் தாய் ஏசியாநெட் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “கடந்த 21-ஆம் தேதி விஸ்மயாவின் தற்கொலை தொடர்பான செய்தியை பார்த்தவுடன் நான் சற்று பயந்தேன். உடனடியாக என்னுடைய மகள் சுசித்ராவை தொடர்பு கொண்டு நீ இதுபோன்ற முடிவை எடுக்கக்கூடாது. என்றும் நானும் அப்பாவும் உனக்கு எப்போது துணையாக இருப்போம் என்று கூறினேன். என்னுடைய மகள் அப்படி ஒரு முடிவை எடுத்திருக்க மாட்டாள்” என்று மிகுந்த மன வருத்தத்துடன் கூறினார். 


இந்த சம்பவம் தொடர்பாக சுசித்ராவின் தந்தை சுனில் மனோரோமா நியூஸ் தொலைக்காட்சியில், “முதலில் நாங்கள் விஷ்ணுவிற்கு இரு சக்கர வாகனம் வாங்கி தருவதாக கூறினோம். ஆனால் அவர்கள் கார் வேண்டும் என்று கூறினார். ஆகவே கார் வாங்கி தர சம்மதம் தெரிவித்தோம். பின்னர் திருமணத்திற்கு 10 நாட்களுக்கு முன்பாக திடீரென வந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கமாக வேண்டும் என்று கேட்டனர். அதற்கு நான் என்னுடைய ஓய்வூதிய பணம் வந்தவுடன் தருகிறேன் என்று உறுதியளித்தேன். எனினும் திருமணம் முடிந்த பிறகு மீண்டும் இந்த 10 லட்சத்தை கேட்டு என்னுடைய மகள் சுசித்ராவை அவர்கள் கொடுமைப்படுத்தியுள்ளனர். குறிப்பாக விஷ்ணுவின் அக்காவிற்கு பணம் உடனடியாக தேவைப்பட்டதால் அதை கேட்டு என்னுடைய மகளை கொடுமப்படுத்தியுள்ளனர். 




அத்துடன் என்னுடைய மகளுக்கு நாங்கள் கொடுத்த தங்க நகைகளையும் அடகு வைத்துள்ளனர். இது குறித்து என்னுடைய மகள் கேள்வி கேட்டதற்கு அடித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து என்னுடைய மகள் என்னிடம் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஒரு நாள் திடீரென என்னை தொலைபேசியில் அழைத்து எதற்காக என் திருமணத்திற்கு நகை கொடுத்தீர்கள் என்று கேட்டு அழுதார்” எனக் கூறினார். அத்துடன் சுசித்ராவின் கணவர் திருமணம் முடிந்த பிறகு ஒரு மாதத்திற்குள் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ராணுவ பணிக்கு  சென்றுள்ளார். அவரிடம் சுசித்ராவிற்கு எந்தவித பிரச்னையும் இல்லை என்று சுசித்ராவின் தாய் தெரிவிக்கிறார். மேலும் சுசித்ராவை அவருடைய மாமியார் தான் அதிகளவில் கொடுமைப்படுத்தியதாகவும் சுசித்ராவின் தாய் தெரிவித்துள்ளார். 


இந்த சம்பவம் தொடர்பாக சுசித்ராவின் மாமா, “சுசித்ராவிற்கு 20 வயதிற்குள் திருமணம் நடத்தவில்லை என்றால் அடுத்த 7 ஆண்டுகளுக்கு திருமணம் நடக்காது என்று ஜோசியர் ஒருவர் கூறினார். அதனால் சுசித்ராவிற்கு விஷ்ணு உடன் திருமணம் செய்து வைத்தோம். ஏற்கெனவே விஷ்ணுவிற்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயம் முடிந்து திருமணம் வரை சென்றுள்ளது. அந்த சமயத்தில் விஷ்ணுவின் பெற்றோர் 10 லட்சம் ரூபாய் ரொக்கமாக கேட்டுள்ளனர். அப்போது திருமணம் நடைபெறாமல் நின்றுள்ளது. இதை சுசித்ராவின் மறைவிற்கு பின் அந்த பெண்ணின் குடும்பத்தினர் எங்களை தொடர்புகொண்டு தெரிவித்தனர்” எனக் கூறியுள்ளார். 


மேலும் படிக்க: பேத்திகளுக்கு பாலியில் தொல்லை; தாத்தா உள்ளிட்ட 4 பேர் போக்சோவில் கைது!