share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 113 அல்லது  0.19 % புள்ளிகள் குறைந்து 60,549.83 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 45.35 அல்லது 0.33% புள்ளிகள் குறைந்து 17,826.35 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த மூன்று நாட்களாகவே பங்குச்சந்தை மந்தமாகவே உள்ளது. ஏற்றத்தில் தொடங்கினாலும் சென்செக்ஸ், நிப்ஃடி புள்ளிகள் மந்தமாகவே இருந்தன. இந்நிலையில், இன்று காலை தொடங்கிய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமாகி வருகிறது.


லாபம்-நஷ்டம்


கிராசிம், பஜாஜ் பின்சர்வ், எச்டிஎஃப்சி லைப், லார்சன், ரிலையன்ஸ், ஏசியன் பையின்ட்ஸ், பிரிட்டானியா, என்டிபிசி, ஓஎன்ஜிசி, டிசிஎஸ், ஹின்டல்கோ, இன்போசிஸ், நெஸ்டீலே, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


அதானி போர்ட்ஸ், பாரதி ஏர்டெல், ஹிரோ மோட்டோகோர்ப், சிப்ளா, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசிகி, அப்போலோ மருத்துவமனை, எஸ்பிஐ, கோடக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, டெட்டன் கம்பெணி, டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


காரணம்


கடந்த ஆண்டினை போலவே இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியான நிலையில், இந்த ஆண்டும் அன்னிய முதலீடுகளானது வெளியேறி வருகின்றது. இதுவரையில் பங்கு சந்தையில் இருந்து 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு வெளியேற்றம் கண்டுள்ளதாக தெரிகிறது. அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், சர்வதேச வளர்ச்சி, சீனாவில் கொரோனா தாக்கம் என பல காரணிகள் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.


இதனால் இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுமட்டுமின்றி, ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வீடு, வாகன கடன்களின் வட்டி விகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெப்போ வட்டியை தொடர்ச்சியாக 6ஆவது முறையாக நேற்று உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.


இதனால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டாமல், லாபம் ஈட்டுவதிலேயே ஆர்வத்தை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக பங்குச்சந்தை இன்று காலை சரிவுடன் தொடங்கியது.


ரூபாயின் மதிப்பு:






இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் குறைந்து 82.59 ரூபாயாக உள்ளது.