இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்த பிறகு, பல வங்கிகள் தங்கள் கடன் வழங்குவதற்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளன.


ரெப்போ வட்டி


மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் கடன் அளிக்கும். அதன் பெயர்தான் ரெப்போ வட்டி ஆகும். பணவீக்கத்தின்போது, கடன் வாங்குவதை தவிர்க்கும் வகையில் ரெப்போ வட்டியை மத்திய வங்கி உயர்த்தும். அதன் மூலமாக பணப்புழக்கம் குறையும், பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டுமானால் ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும். ஆகையால், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் கருவியாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி பயன்படுத்துகிறது.


அந்த வகையில், கடந்த புதன்கிழமை நிறைவடைந்த ஆர்.பி.ஐ கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்தபடியே, ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு மே மாதம் முதல் தொடர்ந்து 6 முறை ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய வங்கி உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக, மே 2022 மற்றும் பிப்ரவரி 2023 க்கு இடையில், ரெப்போ விகிதம் பொதுவாக 2.5% அதிகரித்துள்ளது. அதாவது 4%  லிருந்து 6.5% ஆக அதிகரித்துள்ளன.


வட்டி விகிதத்தை உயர்த்திய வங்கிகள்:


இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்த பிறகு ஆர்பிஎல் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் கடன் வழங்குவதற்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்து உள்ளன.


இந்த விலை உயர்வின் விளைவாக வீட்டுக் கடன்களை வாங்கியவர்கள் இந்த நிறுவனங்களிடமிருந்து மாதாந்திர தவணைகளில் (இஎம்ஐ) அதிகமாக செலுத்தும் சூழ்நிலை ஏற்படும்  


ஆர்பிஎல் வங்கி தனது ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை பிப்ரவரி 08, 2023 முதல் 11.60% ஆக மாற்றம் செய்துள்ளது.


பேங்க் ஆஃப் இந்தியா தனது ரெப்போ லிங்க்டு லெண்டிங் விகிதத்தை பிப்ரவரி 08, 2023 முதல் 9.35% ஆக மாற்றம் செய்துள்ளது.


ரெப்போ விகிதத்தை உயர்த்துவதால் தாக்கம்:


ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தும் போது, ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கும் இதர வங்கிகள் அதிக வட்டி தொகை செலுத்தும் நிலை ஏற்படும். இதனால், வங்கிகளுக்கான நிதி செலவு பெரும்பாலும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக, வங்கிகள் தங்கள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்துகின்றன, செலவுகளை கடன் வாங்குபவர்களுக்கு வழங்குகின்றன மற்றும் இ.எம்.ஐ.களை உயர்த்துகின்றன.


கடன் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டு, வெளிப்புற பெஞ்ச்மார்க் லிங்க்ட் ரேட்டின் (ஈபிஎல்ஆர்) கீழ் எடுக்கப்பட்டால், உங்கள் இஎம்ஐ வேகமாக உயர்ந்து ரெப்போ விகிதத்தின் அதிகரிப்புக்கு சமமாக இருக்கும்.


ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை தொடர்ந்து, இதர வங்கிகளின் நடவடிக்கை வாடிக்கையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.