Petrol Diesel Rate Today, 07 Oct: சென்னையில் நேற்று ஓரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 100.49க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 0.26 காசுகள் அதிகரித்து ரூபாய் 100.75க்கு விற்கப்படுகிறது.  ஒரு லிட்டர் டீசல், நேற்று ரூ.95.93க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று, 0.33 காசுகள் அதிகரித்து ரூபாய் 96.26க்கு விற்பனையாகிறது. பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயை தொட்டுள்ளது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை தொடர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனையாவதும் வாகன ஓட்டிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


முன்னதாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் இருசக்கர வாகனங்கள் அதிகம். பெட்ரோல் விலை உயர ஒன்றிய அரசுதான் காரணம் என்றாலும் மாநில அரசு வரியை குறைக்கிறது. பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படுகிறது. இது உழைக்கும் வர்க்கத்தினருக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு ரூபாய் 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறியிருந்தார்.


ஆனால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வெளியிடப்பட்ட எரிபொருள் பத்திரங்களுக்கு இப்போதைய அரசு 5 ஆண்டுகளில் ரூ.70195 கோடி வட்டி செலுத்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்குள் மேலும் ரூபாய் 37 ஆயிரம் கோடி வட்டியாக செலுத்த வேண்டியுள்ளதால், எரிபொருள் விலையை குறைக்க இயலவில்லை என்று கூறியிருந்தார்.



மேலும், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட கடன் சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை ஏற்புடையதே. ஆனால் மத்திய மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை தீர்வு இல்லை. 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது. காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.


கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தி வருகிறது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 9.48-ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி, 2021 மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 32.9-ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 216 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து வரி பங்கானது மற்ற மாநிலங்களைவிட குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.