தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 17 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்று உயர்ந்தது. இன்றும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. சென்னையில் நேற்றுமுன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 16 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி சென்னையில் பெட்ரோ டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 17 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்று உயர்ந்தது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு அதிகரித்து ரூ.92.55க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசு அதிகரித்து ரூ.85.90க்கு விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் இரண்டாவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசு அதிகரித்து ரூ.92.70க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 19 காசு அதிகரித்து ரூ.86.09க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தேர்தல் முடிவு தெரியும் வரை விலை ஏற்றப்படாமல் இருந்த நிலையில், திடீரென முடிவு வெளியான மறுநாள் பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது நாளாக விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என பிரசாரத்தின் போது முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தேர்தல் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டது.
கடந்த சில நாட்களாக விலை நிலையாக இருந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் அவர்கள் தெரிவித்தபடி பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் என வாகன ஓட்டிகள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் அதற்கு மாறாக திடீரென பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலை, இன்றோடு நிறைவு பெற போவதில்லை. அடுத்தடுத்த நாட்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் அதற்கு முன்பாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு முன்வர வேண்டும் என்கிற கோிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.