Pan Card New Rule: புதியதாக பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி ஆதார் அட்டை நகலுடன், பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் மற்றொரு ஆவணத்தையும் கூடுதலாக சமர்பிக்க வேண்டும்.
பான் கார்ட் விதிகளில் மாற்றம்:
புதியதாக பான் கார்ட்டிற்கு விண்ணபிக்கும் நபர்கள் இனி கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆதார் அட்டை நகல் மட்டுமே போதுமானதாக இருக்காது. மத்திய அரசின் பொது சேவை அமைப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள பதிவின்படி, “விண்ணப்பிக்கும் நடைமுறையானது மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின்படி ஆதார் அட்டையுடன் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்பிக்க வேண்டியது அவசியம். மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஆதார் மட்டுமே போதுமானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் நடைமுறைக்கு வரும் திருத்தப்பட்ட நடைமுறையுடன் ஒப்பிடும்போது, தற்போதைய விண்ணப்பிக்கும் முறை எளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்த தேதிக்கான சான்று அவசியம்
திருத்தப்பட்ட விதிகளின்படி, புதியதாக பான் (PAN) கார்டிற்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டையுடன் தங்களின் பிறந்த தேதியைக் உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். ஏப்ரல் 1 முதல் பழைய விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. தற்போது, விண்ணப்பதாரர்கள் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி (e-KYC) மூலம் பான் கார்டைப் பெறலாம். இருப்பினும், புதிய விதி அமலுக்கு வந்தவுடன், பிறந்த தேதிக்கான சான்று கட்டாயமாக உள்ளது.
ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்கள்:
- பிறப்புச் சான்றிதழ்
- வாக்காளர் அடையாள அட்டை
- பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அல்லது சான்றிதழ்
- ஓட்டுநர் உரிமம்
- பாஸ்போர்ட்
- நீதிபதியால் சான்றளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரம்
ஆகிய ஆவணங்கள் விண்ணப்பதாரரின் பிறந்த தேதியை உறுதிப்படுத்துவதற்கான சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரிபார்ப்பை வலுப்படுத்துவதையும், அடையாளப் பதிவுகளில் ஏற்படும் பிழைகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் கார்ட் - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பான் கார்டிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- அதிகாரப்பூர்வ NSDL இணையதள முகவரியை அணுகவும்
- ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்து, புதிய பான் – இந்தியக் குடிமகன் (படிவம் 49A) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- தனிநபர் என்ற பிரிவை க்ளிக் செய்யவும்
- பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை நிரப்புங்கள்
- கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு படிவத்தைச் சமர்ப்பியுங்கள்
- எதிர்காலப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட டோக்கன் எண்ணைக் குறித்துக்கொள்ளவும்.
- ஆதார் அடிப்படையிலான OTP சரிபார்ப்பை பூர்த்தி செய்யுங்கள்
- முகவரி மற்றும் பெற்றோர் விவரங்களை நிரப்புங்கள்
- ஆதார் முகவரி தானாகவே பயன்படுத்தப்பட வேண்டுமென்றால், இ-கேஒய்சி-ஐத் தேர்ந்தெடுங்கள்
- விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்துங்கள்
- OTP-ஐப் பயன்படுத்தி ஆதார் அங்கீகாரத்தை பூர்த்தி செய்யுங்கள்
- வெரிஃபிகேஷனுக்குப் பிறகு படிவத்தைச் சமர்ப்பியுங்கள்
- விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, சரிபார்ப்பு நிறைவடைந்ததும் பான் கார்ட் விநியோகிக்கப்படும்
பான் கார்ட் - கடைசி வாய்ப்பு
மார்ச் 31-ஆம் தேதிக்கு முன்னர் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், செயல்முறையை நிறைவு செய்ய ஆதார் அட்டையை மட்டுமே பயன்படுத்தினாலே போதுமானது. ஏப்ரல் 1ம் தேதி முதல், கூடுதல் ஆவணங்கள் கட்டாயமாக்கப்படும். இதனால் விண்ணப்பச் செயல்முறை தற்போதைய முறையை விட சற்றே அதிக நேரம் எடுக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.