ITR Filing: வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பு எதையும், மத்திய அரசு வெளியிடவில்லை.


வருமான வரி கணக்கு தாக்கல்:


கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்று நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவுக்கு வந்தது. இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இதுவரை (ஜூலை 31) 7 கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 50 லட்சத்திற்கும் அதிகமான ஐடிஆர்கள் இன்று (ஜுலை 31ம் தேதி) மாலை 7 மணி வரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன! ITR தாக்கல், வரி செலுத்துதல் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளுக்கு வரி செலுத்துவோருக்கு உதவ, எங்கள் ஹெல்ப் டெஸ்க் 24x7 அடிப்படையில் செயல்படுகிறது, மேலும் அழைப்புகள், லைவ் சாட்கள், WebEx அமர்வுகள் & Twitter/X மூலம் ஆதரவை வழங்குகிறோம். இந்த மைல்கல்லை அடைய எங்களுக்கு உதவிய வரி செலுத்துவோர் மற்றும் வரி நிபுணர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் AY 2024-25க்கான ITR ஐத் தாக்கல் செய்யாத அனைவரையும் ஐடிஆர் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவகாசம் நீட்டிக்கப்படுமா?


அதேநேரம், கடந்த சில நாட்களாகவே ஒரே நேரத்தில் ஏராளமானோர், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான இணையதள முகவரியை அணுக முயன்றுள்ளனர். இதனால், அந்த இணையதளத்தை அணுக முடியாத சூழல் நிலவியதாக கூறப்படுகிறது. இதனை குறிப்பிட்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பு எதுவும் அரசு தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை. ஒருவேலை அவகாசம் நீட்டிக்கப்படாவிட்டால், ஜுலை 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் பின்வரும் அபராதங்களை செலுத்தக்கூடும்.


எதிர்கொள்ள வேண்டிய அபராதங்கள்:


வட்டி அபராதம்: பிரிவு 234A இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி, செலுத்தப்படாத வரித் தொகைக்கு மாதத்திற்கு 1 சதவீதம் அல்லது ஒரு மாதத்தின் ஒரு பகுதி வட்டி விதிக்கப்படும்.


தாமதக் கட்டணம்: பிரிவு 234Fன் கீழ் ரூ. 5,000 தாமதக் கட்டணம் விதிக்கப்படும். உங்களின் மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் இந்தக் கட்டணம் ரூ.1,000 ஆக குறைக்கப்படுகிறது.


இழப்பு சரிசெய்தல்: பங்குச் சந்தை, பரஸ்பர நிதிகள், சொத்துக்கள் அல்லது வணிகங்கள் போன்ற மூலங்களிலிருந்து ஏற்படும் இழப்புகள் எதிர்கால வருமானத்தை ஈடுசெய்யவும் வரிப் பொறுப்பைக் குறைக்கவும் முன்னோக்கி கொண்டு செல்லப்படலாம். இருப்பினும், உங்கள் ITR ஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால், இந்த நன்மை இழக்கப்படும்.


கூடுதல் விளைவுகள்:


தாமதமாகத் தங்கள் வருமானத்தைத் தாக்கல் செய்யும் வரி செலுத்துவோர் தங்களுக்கு ஏற்பட்டுள்ள மூலதன இழப்பை முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பையும் இழப்பார்கள். இதன் விளைவாக, எதிர்கால ஆதாயங்களுக்கு எதிராக இந்த இழப்புகளை அவர்களால் ஈடுசெய்ய முடியாது. இது வரவிருக்கும் ஆண்டுகளில் அதிக வரிப் பொறுப்புக்கு வழிவகுக்கும்.