இந்தியாவின் மிகப்பெரிய பேமெண்ட் தளமான பேடிஎம் பங்குகள்  மும்பை தேசிய பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் வெளியீட்டு விலையை விட 26% சரிவில் காணப்பட்டது.

  


மேலும், Macquarie என்ற Global brokerage நிறுவனம், பேடிஎம் ஐபிஓ குறைவான செயல்திறன்  கொண்டதாகவும், வரும் நாட்களில் வெளியீட்டு விலையை விட  40%  வரை சரிவை சந்திக்கலாம் என்று கணித்துள்ளது.   



முன்னதாக, ஆரம்ப பொது பங்கு(ஐபிஓ)  விற்பனை மூலம், பேடிஎம் செபி விதிமுறைகளின் கீழ், பங்குச் சந்தையில் பட்டியலிட்டது.  நவம்பர் 8-ம் தேதி முதல் நாளில் 16 சதவீதம் அளவுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த அறிவிப்பின் மூலம், ரூ.18,300 கோடி அளவுக்கு நிதி திரட்டும் மிகப்பெரிய ஐபிஓ இதுவாக கூறப்பட்டது. கோல் இந்தியா ஐபிஓ 2010-ம் ஆண்டு வெளியானது. அப்போது அந்த நிறுவனம் ரூ.15200 கோடி திரட்டியது. அதன் பிறகு மிகப்பெரிய தொகையை திரட்டும் நிறுவனம் இதுதான் என்பதால் சந்தையில் முக்கியத்துவம் பெற்றது. அதன்படி, ஒரு பங்கின் விலையாக ரூ.2080 முதல் ரு 2,150 வரை நிர்ணயம் செய்யப்பட்டது. 

 

18300 கோடி ரூபாயில் 8300 கோடி ரூபாய் புதிய பங்குகள் மூலமும், ரூ.10000 கோடி ரூபாய் ஏற்கெனவே முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதன் மூலமும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 


சரிவுக்கு காரணம் என்ன?  


1. தற்போதைய சூழலில் நஷ்டமீட்டும் இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களை தக்க வைப்பது கடினம் என்றும் அதனால் இந்த ஐபிஓவை தவிர்க்கவும் சில புரோக்கிங் நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. சில நிறுவனங்கள் மிக நீண்ட காலத்துக்கு திட்டமிடுபவர்கள் மட்டும் முதலீடு செய்யலாம் என்றும் சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 


 2. டிஜிட்டல் பண பரிமாற்றம் மிகப்பெரிய சந்தையாக இருந்தாலும், கூகுல் பே, அமேசான் பே, வாட்ஸ்அப், வால்மார்ட் ஆதரவுடன் இயங்கும் போன்பே போன்ற வலுவான போட்டியாளர்கள்  பேடிஎம் சந்தித்து வருகிறது. 



3. பேமண்ட் தளத்தைத் தாண்டி பேடிஎம் நிறுவனம் பலவித சந்தைகளில் கால்பதித்து வருகிறது. இதனால், எந்த துறையிலும் அதனால் மிகப்பெரிய சக்தியாக உருவாக முடியவில்லை. ஒருவித தெளிவற்ற தன்மை அதனிடத்தில் காணப்படுகிறது.  


2016-ம் ஆண்டு பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகுதான் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகமாக இருந்தது. அதேபோல நவம்பர் 8-ம் தேதி ஐபிஒ தொடங்கி இருப்பது ஒரு தற்செயல் நிகழ்வே இந்த நிறுவனம் கடந்த மூன்று நிதி ஆண்டுகளாக லாபம் ஈட்டவில்லை. கடந்த நிதி ஆண்டில் ரூ.1701 கோடியாக நஷ்டம் இருந்தது. கடந்த ஜூன் காலாண்டில் கூட ரூ.381 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது.


இந்த நிறுவனம் ஆர்பிஐ, செபி மற்றும் ஐஆர்டிஏ உள்ளிட்ட மூன்று நிதி சார்ந்த ஒழுங்குமுறை ஆணையங்களின் கட்டுபாட்டில் செயல்படுகிறது. அதனால் இந்த நிறுவனத்தின் ரிஸ்க் கொஞ்சம் அதிகம் என்பதை சில புரோக்கிங் நிறுவனங்கள் கூறியிருக்கின்றன. 


ஐபிஓ-வில் கலக்கும் மற்ற நிறுவனங்கள்:    


சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் ஐபிஓ வெளியிட்ட ஜொமோட்டோ நிறுவனம் பல கோடீஸ்வரர்களை உருவாக்கி இருக்கிறது. ஜொமோட்டோ நிறுவனத்தில் நிறுவனரின் சொத்து மதிப்பு 4,650 கோடி ரூபாய். இதுதவிர 100 கோடிக்கு மேல் 7 உயர் அதிகாரிகள் பங்குகளை வைத்திருக்கிறார்கள். இது தவிர பலருக்கும் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் உள்ளன. நய்கா நிறுவனத்தின்  ஐபிஓ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் ஆறு உயர் அதிகாரிகள் வைத்திருக்கும் பங்குகளின் மொத்த மதிப்பு ரு.850 கோடி என தெரியவருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண