சென்னையில் வணிக சிலிண்டரின் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


விலை உயர்வு:


இதுதொடர்பான அறிவிப்பின்படி. சென்னையில் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டரின் விலை 92.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.  இதனால், சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.92.50 குறைந்து ரூ.1,852.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர்  விலை மாற்றமின்றி ரூ.1,118.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  


சிலிண்டர் விலை மாற்றம்:


மாதந்தோறும் முதல் நாளில் சமையல் பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர்களின் விலையானது எண்ணெய் நிறுவனங்களால் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் எரிவாயு விலையும் உயர்த்தப்படுகிறது.


ஏற்ற இறக்கத்தில் வணிக சிலிண்டர் விலை:


இந்தநிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு, உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை நிலையாக இருந்து வருகிறது. அவ்வபோது வணிக சிலிண்டர்களின் விலை மட்டுமே அவ்வபோது மாற்றமடைந்து கொண்டு வந்தது. அதன்படி, ஏப்ரல் 1 ஆம் தேதி 2,192.50 ஆக இருந்த கேஸ் சிலிண்டர் விலை கடந்த மே மாதம் 1ம் தேதி 171 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.2021.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து,  கடந்த ஜூன் மாதம் 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 84.50 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், ஜுலை மாத, வணிக சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்ந்து கடந்த ஒரு மாத காலமாக 1945 ருபாய்க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் தான் ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளான இன்று, சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.92.50 குறைக்கப்பட்டுள்ளது.


எதன் அடிப்படையில் எரிவாயு சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது..?


டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை  ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.


குறிப்பாக, எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசால் நிர்ணயிக்கப்படும். ஏற்கெனவே, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டது. இதையடுத்து,  வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் தொடர்ந்து மாற்றம் எதுவும் செய்யப்படாமல் உள்ளது.  அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் தேர்தல் வர உள்ளதால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் சில மாதங்களுக்கு பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.