கொரோனா வைரஸ் காரணமாகவும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையாலும் உலகம் முழுவதும் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், எலெக்ட்ரானிக் சிப்புகள் தட்டுப்பாடு அதிகரித்து இருப்பதால் நிர்ணயித்த இலக்கில் கார்களை தயாரிக்க முடியாமல் நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன.


உலகின் முன்னணி கார் நிறுவனங்களான ஃபோர்டு, வோக்ஸ்வாகன் மற்றும் டைம்லர் போன்றவை சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள சிப் பற்றாக்குறையின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் போராடி வருகின்றனர். சிப்களை தயாரிக்க பயன்படும் சிலிக்கான் என்ற மூலப்பொருளுக்கு ஏற்பட்டு இருக்கும் தட்டுப்பாடு முக்கிய பிரச்னையாக இருக்கப்போவதாக கார் நிறுவன நிர்வாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் நடைபெற்ற கார் கண்காட்சியில் பங்கேற்ற வோக்ஸ்வாகன் தலைமை நிர்வாக அதிகாரி ஹெர்பர்ட் டைஸ், டைம்லர் கார் தலைமை நிர்வாக அதிகாரி ஓலா கல்லேனியஸ் மற்றும் போர்டு நிறுவனத்தின் ஐரோப்பிய மேலாண்மை வாரியத் தலைவர் குன்னர் ஹெர்மன் ஆகியோர் சி.என்.பி.சி. ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் சிலிக்கான் சிப் தட்டுப்பாடு குறித்து கவலை தெரிவித்து உள்ளனர்.



ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மனியின் வோக்ஸ்வாகன், சிப் பற்றாக்குறையின் விளைவாக சீனாவில் பங்குச்சந்தையை இழந்துவிட்டதாக அதன் சி.இ.ஒ. டைஸ் கூறியுள்ளார். ”செமி கண்டக்டர் பற்றாக்குறையால் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம். உலகின் மற்ற பகுதிகளை விட சீனாவில் நாங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளோம். அதனால் தான் நாங்கள் பங்குச்சந்தையை இழந்திருக்கிறோம்."


செமி கண்டக்டர் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க சீனாவில் உள்ள தங்கள் அதிகாரிகளிடம் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், சிப்ஸ் பற்றாக்குறை "மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தி இருப்பதாக அவர் என்று விவரித்து உள்ளார். வோக்ஸ்வாகன் கார்கள் அதிகம் விற்பனை செய்யப்படும் மலேசியாவில், சிப் தட்டுப்பாடு காரணமாக கார்கள் உற்பத்தி செய்யபடாததால், பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. கொரோனா பரவல் குறைப்பதால் சிப் பற்றாக்குறை நீங்கும் என்று வோக்வாகன் சி.இ.ஓ. டைஸ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.


ஃபோர்டு நிறுவனத்தின் ஐரோப்பிய அதிகாரி ஹெர்மன் கூறுகையில், “சிப் பற்றாக்குறை 2024 வரை நீடிக்கும் என்று நினைக்கிறேன். இந்த பிரச்சனை எப்போது தீரும் என்பதை சரியாகக் குறிப்பிடுவது கடினம். மின்சார வாகனங்களின் வருகை அதிகரித்து உள்ளதால் எலெக்ட்ரானிக் சிப்கள் பற்றாக்குறை அதிகரித்து இருக்கலாம்.” சாதாரண கார்களுக்கு 300 சிப்கள் தேவைப்பட்டால், புதிய மின்சார கார்களுக்கு 3,000 சிப்புகள் தேவைப்படுகின்றன. அதே போல், மூலப்பொருட்களில் புதிய நெருக்கடியை ஃபோர்டு எதிர்கொள்கிறது.” என அவர் கூறினார். "


”சிலிகான் செமி கண்டக்டர் மட்டுமின்றி, எலெக்ட்ரிக் வாகன பேட்டரிகளுக்கு தேவையான லித்தியம், பிளாஸ்டிக் மற்றும் எஃகு அனைத்தும் ஒப்பீட்டு அளவில் குறைவாகவே உள்ளன. எல்லா இடங்களிலும் பற்றாக்குறை அல்லது தடைகள் உள்ளன. மூலப்பொருட்களின் விலை உயரும்போது கார் விலை உயரும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஐரோப்பாவில் 1956-ம் ஆண்டுக்கு பிறகு கார் உற்பத்தி சிப்களின் தட்டுப்பாட்டால் இந்த ஆண்டு மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது கவனிக்கத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI