உக்ரைன் - ரஷியா, இஸ்ரேல் - ஹமாஸ் போர், சர்வதேச அளவில் தங்கத்திற்கு ஏற்பட்டுள்ள தேவை என பல்வேறு காரணங்களால் பங்கு சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், வரும் வாரத்தில் தங்கள் முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை (dividend) வழங்க உள்ளதாக 14 நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


நாளை, தங்கள் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்கு 1 ரூபாய் வழங்க உள்ளது மணப்புரம் நிறுவனம். அதேபோல, துருவ் கன்சல்டன்சி சர்வீசஸ் முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகையாக 0.25 ரூபாய் வழங்கப்பட உள்ளது. வரும் 27ஆம் தேதி, விண்ட்சர் மெஷின்கள், ஒரு பங்குக்கு 0.5 ரூபாய் வழங்கப்பட உள்ளது.


அதேபோல, மனோரமா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தங்கள் முதலீட்டாளர்களுக்கு 0.4 ரூபாய் தர உள்ளது. ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு 4 ரூபாய் வழங்க உள்ளது கேடிடிஎல் நிறுவனம். வரும் 28ஆம் தேதி, ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், ஒரு பங்குக்கு 20 ரூபாய் வழங்க உள்ளது. இந்துஸ்தான் ஜிங்க், ஒரு பங்குக்கு 0.1 ரூபாய் வழங்க உள்ளது. 


கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 33.02 அல்லது 0.041% புள்ளிகள் உயர்ந்து 81,086.21 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 11.65 அல்லது 0.047% புள்ளிகள் உயர்ந்து 24,823.15 ஆக வர்த்தகமாகியது.


இந்திய ரூபாய் மதிப்பு:


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 82.90 ஆக இருந்தது.


24 நிறுவனங்களுக்கு பங்குச்சந்தையில் தடை:


அனில் அம்பானியின் உள்ளிட்ட 4 பேர் மற்றும் 24 நிறுவனங்களுக்கு பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய தடை விதித்து SEBI உத்தரவிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (SEBI) நடவடிக்கை எடுத்தது. அனில் அம்பானிக்கு பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ரூ. 25 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.


ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் மற்றும் அதன் முன்னாள் அதிகாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு பங்குச்சந்தையில் 6 மாதங்களுக்குத் தடை மற்றும் 6 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.