வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது உறுப்பினர்களுக்கு பலனளிக்கும்,பயனளிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ளது. அதில், சிலவற்றை இங்கே காணலாம்.     


இ-நாமினேஷன்: 


வரும் 31ம் தேதிக்குள், அனைத்து ஊழியர்களும் பணத்துக்கான நாமினி விவரங்களை மின்னணு முறையில் நாமினேஷன் தாக்கல் செய்ய வேண்டும் என்று தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம் தெரிவித்துள்ளது.  ஊழியர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை கட்டாயம்  நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும். இதற்கான வசதி உறுப்பினர்களின் இணைய பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.


இ-நாமினேஷன்  மூலம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் தங்களுக்கு பண உதவி தேவைப்படும் போது, அவர்களே எளிதாக இபிஎஃப்ஓ நிறுவனத்தின் சேவையை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


EPFO website>> Services>> For Employees>> Click “Member UAN/Online Services என்ற வசதி  இ-நாமினேஷன் செய்யலாம். 




 


அதார் இணைப்பு:  


மத்திய அரசின் சமூக பாதுகாப்புச் சட்டம், பிரிவு 142-ன்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுத்தல், ஓய்வூதியம் பெறுதல், காப்பீட்டு பலன்களைப் பெற ஆதார் எண்ணை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


இதன்படி, நிறுவன முதலாளிகள் தங்களுடைய ஊழியர்களின் ஆதார் எண்ணை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்குடன் கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த இணைப்பை மேற்கொள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம் நவம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது. எனவே, அனைத்து நிறுவனமும், தங்களது ஊழியர்களின் ஆதார் எண்ணை, வருங்கால வைப்பு நிதிக் கணக்குடன் இணைக்க வேண்டும். இந்தக் கால அவகாசத்துக்குள் இணைக்கா விட்டால்  வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது. 


பணியாளர் வருங்கால வைப்பு நிதி - பணியாளர்களின் சேமிப்புடன் இணைந்த காப்பீட்டு திட்டம் (ஈடிஎல்ஐ) : கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதார ரீதியாக பாதிகப்பட்டவர்களின் நிதி நிலையை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டத்தில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, அதிகபட்ச காப்பீட்டு பலன் ரூ 6 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தப்பட்டது. குறைந்தபட்ச காப்பீட்டு பலனாக ரூ 2.5 லட்சம் மீண்டும் இருக்கும். இந்த திட்டம் 2022 பிப்ரவரி 15 வரை அமலில் இருக்கும். ஒப்பந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றும் விதி தாரளமயமாக்கப்பட்டு, இறப்புக்கு 12 மாதங்களுக்கு முன்பு பணி மாறியோரின் குடும்பங்களுக்கும் பலன் கிடைக்கும் என்ற வகையில் விதிமுறை தாராளமாக்கப்பட்டது. 


காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளி, கொரோனா பாதிப்பால் இறந்தால், அவரது குடும்பத்தினர் சராசரி தின ஊதியத்தில் 90 சதவீதம் தொகையை மாதந்தோறும், தங்கள் வாழ்நாளில் பெறலாம். இறந்த ஊழியரின் வாழ்க்கைத்துணை ஆண்டுக்கு ரூ.120 செலுத்தி மருத்துவ சிகிச்சை பெறலாம். இத்திட்டம், கொரோனா  தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு, 30 நாட்களில் இறந்தவர்களுக்கும் பொருந்தும். 





பணியாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம்: கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்கள் நல்ல வாழ்க்கை தரத்துடனும் வாழ்வதற்கு உதவும் வகையில் பணியாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம் பெறும் திட்டத்தில் சில மாற்றங்களை அரசு கொண்டு வந்தது. அதன்கீழ், தொழில் சார்ந்த இறப்புகளுக்கு வழங்கப்படும் பணியாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் ஓய்வூதியப் பலன் கொவிட் இறப்புகளுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 


ஏற்கனவே உள்ள விதிகளின் படி, தொழிலாளியின் சராசரி தினக் கூலியில் 90 சதவீதத்திற்கு சமமான ஓய்வுதியத்தை குடும்ப உறுப்பினர்கள் பெறலாம். 2022 மார்ச் 24 வரை இந்த திட்டம் அமலில் இருக்கும். 


மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம்:


மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் சந்தாதாதரின் அனைத்து கணக்குகளும் ஒன்றிணைக்கப்படும் என்றும்,  இதன் காரணமாக, பணி மாறுதலின் போது பழைய பிஎஃப் கணக்கை புதிய நிறுவனத்துக்கு மாற்ற வேண்டிய சூழல் எழாது என்றும்  வருங்கால வைப்பு நிதி அமைப்பு  தெரிவித்துள்ளது.