சண்டிகர் போக்குவரத்து போலீசில் பிரியங்கா என்பவர் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. 6 மாத மகப்பேறு விடுமுறைக்கு பிறகு கடந்த 3-ந் தேதி அவர் மீண்டும் பணியில் சேர்ந்தார் கடந்த 5-ந்தேதி பிரியங்கா தனது கைக்குழந்தையுடன் பணிக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பிரியங்கா கைக்குழந்தையுடன் நின்றபடியே பணியாற்றுவதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.




 

இது தொடர்பாக பேசிய பிரியங்கா “2 நாட்கள் எனது வீட்டுக்கு அருகே பணி ஒதுக்கப்பட்டது. கைக்குழந்தையுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினேன். ஆனால் 3-வது நாளில் தொலைவில் உள்ள செக்டர்-29 பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி கொடுத்தனர்.

எனது குழந்தையை தனியாக விட்டுச்செல்ல முடியாது என்பதால் அவனை கையில் தூக்கிச் சென்றேன். தற்போதைக்கு எளிதான பணி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். இதை உயர் அதிகாரி ஏற்றுக்கொண்டுள்ளார்” என்றார்