நாட்டின் 2023-2024வது நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.


நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது, “ சுதந்திரத்தின் 75வது ஆண்டில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தில் இந்தியா ஒளிரும் நட்சத்திரம். கடந்த பட்ஜெட்டுகள் அமைத்த அடித்தளத்தின் மீது கட்டப்படும் பட்ஜெட் ஆக இந்த பட்ஜெட் அமையும். நடப்பாண்டில் இந்தியா 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை காணும். மற்ற நாடுகளை விட இது அதிகம்.


இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருப்பதை உலக நாடுகளே ஒப்புக்கொண்டுள்ளன. இந்த பட்ஜெட் இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பட்ஜெட் ஆகும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை மக்களுக்கு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைக்கோடி மனிதருக்கும் சேவை, உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, பசுமை வளர்ச்சி, இளைஞர் நலன்  ஆகிய 7 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது."


இவ்வாறு அவர் பேசினார். 


மேலும் பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், "அடுத்த ஓராண்டுக்கு 80 கோடி குடும்பங்களுக்கு இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கும். பெண்கள், பட்டியலின, பழங்குடியின, இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. உணவு தானிய விநியோகத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்.


மருத்துவ துறையில் ஆய்வுகளை ஊக்குவிப்பதற்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். தேசிய டிஜிட்டல் நூலகம் மேம்படுத்தப்படும். கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை குறைப்பதற்காக நாடு முழுவதும் பிராந்திய மற்றும் ஆங்கில மொழிகளில் டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும். 2047ம் ஆண்டில் இந்தியாவில் 0-40 வயது வரையிலான மக்களுக்கு ரத்த சோகையை முற்றிலும ஒழிக்கும் திட்டங்கள் அமல்படுத்தப்படும். பழங்குடியின மக்கள் வசிக்கும் ஏகலைவா மாதிரிப் பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.


ஏகலைவா பள்ளியில் ஆசிரியர்கள் நியமனம் மூலம் 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்கள் பயனடைவார்கள். அரசு ஊழியர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்வதற்காக இணையதளம் மூலம் கற்பிக்கும் கர்மயோகி திட்டம். நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூபாய் 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. கழிவு நீர் அகற்றும் பணியில் மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதில் 100 சதவீத இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திணை உற்பத்தியில் இந்தியா 2வது மிகப்பெரிய ஏற்றுமதியாளராக திகழ்கிறது.


அனைத்து அரசு சேவைகளுக்கும் அடையாள ஆவணமாக பான் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தலாம். ரூபாய் 700 கோடி ரூபாய் மதிப்பில் ஆன்லைன் நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூபாய் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையங்கள் அமைக்கப்படும். சிறு, குறு, தொழில் நிறுவனங்களுக்கான தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும். ஆதார் கார்டு, பான் கார்டு, டிஜி லாக்கர் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். 5ஜி மொபைல் செயலி உருவாக்க 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும்"


ஆகிய அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். 


பட்ஜெட் குறித்த லைவ் அப்டேட்ஸ்க்கு... இங்கே கிளிக் செய்யவும்...


Budget 2023 LIVE: ரயில்வே திட்டங்கள்: ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!