தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2025-26ம் நிதியாண்டில் ரூ. 6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2009-2014 காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிகாலத்தில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.879 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது 2025- 2026 பாரதிய ஜனதா அரசு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி ஒதுக்கீடு செய்ததைகாட்டிலும் 654 சதவீதம் அதிகமாகும்.

இதில் ரூ. 2,948 கோடி மதிப்பீட்டில் 77 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. மொத்தமாக 2,587 கிலோ மீட்டர், நீளத்திற்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.

தமிழகத்தில் 10 புதிய ரயில் பாதை திட்டங்கள், 3 அகல பாதை திட்டங்கள், 9 இரட்டை வழி பாதை திட்டங்களுக்கான பணிகள் நடைமுறையில் உள்ளது.

புதிய ரயில் பாதைக்கு ரூ.246 கோடியும் அகல பாதை திட்டத்திற்கு ரூ.478 கோடியும் இரட்டை வழி பாதை திட்டத்திற்கு ரூ.812 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக ரூ. 1,536 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.