புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் அரசின் அடுத்த 5 மாத செலவினங்களுக்காக ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி பேரவையில் தாக்கல் செய்தார். 


புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், புதுச்சேரி சட்டப்பேரவையில் 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நடப்பு நிதியாண்டு மார்ச் மாதம் 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை காரணமாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி மீண்டும் சட்டப்பேரவை கூட்டப்பட்டது. ஒரு நாள் நடந்த கூட்டம் அலுவல்கள் முடிந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.


இந்த நிலையில், நாடளுமன்ற தேர்தல் வருவதால் மார்ச் மாதம் மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில் அரசின் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெற இன்று காலை 9.45 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்கியது. நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.


இரங்கல் குறிப்பு


துவக்கத்தில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவு குறித்து இரங்கல் தீர்மானத்தை முதல்வர் ரங்கசாமி வாசித்தார். அதைத்தொடர்ந்து மறைந்த எம்எஸ் சுவாமிநாதன், பங்காரு அடிகளார், சங்கரய்யா, பாத்திமா பீவி, நடிகர் விஜயகாந்த் ஆகியோரின் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.


தொடர்ந்து, அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத செலவினங்களுக்கு ரூ. 4634 கோடி 29 லட்சத்து 89 ஆயிரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததால் திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.


குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஒப்புதல்கள் பெறுவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்ற  சட்ட முன் வரைவை அமைச்சர் நமச்சிவாயம் தாக்கல் செய்த நிலையில் அந்த தீர்மானம்  சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றம்


எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசியதாவது...


மத்திய அரசு நிதி ஒதுக்கிவிட்டார்கள். முழு பட்ஜெட்டை முயற்சி எடுத்திருந்தால் போட்டிருக்கலாம். ஆளுநர் பிரச்சினையால் அனுப்பவில்லையா? பத்து ஆண்டுகள் பின்தங்கிவிட்டனர். வாய்ப்பு கிடைத்திருந்தாலும் அலட்சியமாக கோஷ்டி பூசலால் தவற விட்டுள்ளீர்கள். புதுச்சேரிக்கு பிரச்சினை அதிகமாக இருக்கிறது. 3 நாட்களாவது கூட்டத்தை நடத்தலாம். கலந்து பேசினால் அதிகாரிகளுக்கு தெரியும். அடுத்து ஆறு மாதங்கள் கழித்துதான் கூட்டத்தை நடத்துவீர்கள். அதனால் வெளிநடப்பு செய்கிறேன் என்றார். இந்தநிலையில் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் அறிக்கைகளை வாசித்தார். பின்னர் எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


ஒருமணிநேரம் நடைபெற்ற சட்டப்பேரவை 


புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் 1மணி நேரம் நடைபெற்ற சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது