வாய் தவறிய நிர்மலா சீதாராமன்:


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து நான்காவது முறையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தர். பல்வேறு துறைகளுக்கான புதிய திட்டங்களை அறிவித்தார். அப்போது, மாசடைந்த பழைய வாகனங்களை மாற்றுவது தொடர்பான  அறிவிப்பின்போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாய் தவறி பட்ஜெட்டில் இருந்த வார்த்தையை தவறாக உச்சரித்தார்.






அவையில் சிரிப்பலை:


அதாவது, பழைய மாசடைந்த வாகனம் என்பதை குறிக்கும்  old polluted என்று கூறுவதற்கு பதிலாக, old political  என நிர்மலா சீதாராமன் வாசித்தார். old political  என்பது  அரசியல்  மாற்றத்தை குறிக்கும் என்பதால்,  நாடாளுமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது. உடனடியாக எதிர்க்கட்சியினர் polluted, polluted என வலியுறுத்தினார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட நிர்மலா சீதாராமன் தவறுக்கு மன்னிப்பு கோரி, polluting vechile என சரியாக வாசித்து, தவறை சுட்டிக் காட்டியதற்காக எதிர்க்கட்சியினருக்கு நன்றியும் தெரிவித்தார். இதனால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது. பின்பு நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை தொடங்கினார்.


50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன்:


முன்னதாக அவரது உரையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, மூலதனச் செலவுகளுக்கான முதலீடு 33 சதவிகிதம் உயர்த்தப்பட்டு  ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவிகிதம் ஆகும்.  மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  அதில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ. 75 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இலவச உணவு தானியங்கள் அளிக்கும் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.


தனிநபர் வருமானம் உயர்வு:


டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை மிக அதிகளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்தாண்டில் 1.24 கோடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. நாட்டில் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது. நாட்டில் தனிநபர் வருமானம் ரூபாய் 1.97 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த பட்ஜெட்டில் ஒருங்கிணைந்த வளர்ச்சி, சுற்றுலாத்துறைக்கு ஊக்கம்  ஆகியவற்றிற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  வேளாண்துறையில் புத்தாக்க தொழில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நாடு முழுவதும் 220 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. விவசாய வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக நிதி அதிகரிக்கப்படும். வரும் நிதியாண்டில் 20 லட்சம் கோடி விவசாயக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.”