2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட்:


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து நான்காவது முறையாக கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நடப்பு நிதியாண்டிற்கான அரசின் மொத்த செலவினம் ரூ.39.45 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டது. கடன் தவிர்த்த மொத்த வரவுகள் ரூ.22.84 லட்சம் கோடியாகவும், நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.9 சதவிகிதம் ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவிற்கு கிடைத்த வருவாய், அதனை செலவிடும் விகிதம் ஆகியவற்றை ஒரு ரூபாயை அடிப்படையாக கொண்டு தற்போது அறியலாம்.


அரசுக்கான வருமானம் என்ன:


மத்திய அரசுக்கு மொத்தமாக ஒரு ரூபாய் வருமானமாக கிடைக்கிறது என்றால், அதில் 35 பைசா கடன் மற்றும் அதுதொடர்பான வழிகளில் கிடைக்கிறது. ஜிஎஸ்டி வருவாய் மூலம் 16 பைசா, வருமான வரி மூலம் 15 பைசா, கார்ப்ரேட் வரி 15 பைசா, மத்திய கலால் வரி பைசா 7 பைசா, சுங்க வரி மூலம் 5 பைசா, வரி அல்லாத வருவாய் மூலம் 5 பைசாவும் மத்திய அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது. கடன் அல்லாத மூலதன வரவாக 2 பைசாவும் கிடைக்கிறது. இந்த அடிப்படையில் தான் மத்திய அரசுக்கான ஒவ்வொரு ரூபாய் வருவாயும் கிடைக்கப்பெறுகிறது.


அரசு செலவு செய்வது எப்படி?


அதேநேரம் பல்வேறு வழிகளில் கிடைக்கும் வருவாயை, அரசு வெவ்வேறு வளர்ச்சி பணிகளுக்காக செலவிட்டு வருகிறது. அந்த வகையில் அரசு செய்யும் பெரும் செலவாக ஒவ்வொரு ரூபாயில் இருந்தும் 20 பைசாவை, கடன்களுக்கான வட்டியை திருப்பி செலுத்துவதற்காக செலவு செய்கிறது. ஒட்டுமொத்த வரி வருவாயில் மாநிலங்களின் பங்காக 17 பைசா வழங்கப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்காக 15 பைசாவும், நிதிக்குழுவிற்கு வழங்குவது உள்ளிட்ட வழிகளில் 10 பைசாவும்,  மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு 9 பைசாவும் செலவு செய்யப்படுகிறது. இதர செலவுகளுக்காக 9 பைசாவும், பாதுகாப்பு மற்றும் மானியங்களுக்காக தலா 8 பைசாவும் ஒதுக்கப்படுகிறது. இறுதியாக ஓய்வூதிய திட்டங்களுக்காக 4 பைசாவும் மத்திய அரசின் ஒவ்வொரு ரூபாய் வருவாயிலும் செலவு செய்யப்படுகிறது.


 


நிதிப்பற்றாக்குறை:


2022-23 நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவிகிதம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இது 2021-22 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.9% என்ற திருத்தப்பட்ட மதிப்பீட்டை விடக் குறைவு ஆகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் வரவு செலவுத் திட்டம் நடப்பு நிதியாண்டில் EBR அல்லது தேசிய சிறுசேமிப்பு நிதியத்தின் கடன்களை நம்பியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கூடுதல் நிதி பெற்ற அமைச்சகங்கள்:


முந்தைய நிதியாண்டை காட்டிலும் நடப்பு நிதியாண்டில், தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு 93 சதவிகிதம் கூடுதல் நிதியும், அதைத் தொடர்ந்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திற்கு 52 சதவிகிதம் கூடுதல் நிதியும் வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து, ஜல் சக்தி அமைச்சகத்திற்கு கடந்த நிதியாண்டை காட்டிலும், நடப்பு நிதியாண்டில் 25 சதவிகிதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.