சென்னையின் பிரபல டீ நிறுவனமான சாய் வாலே தனது  முதலீட்டாளர்களை விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் கூடுதலாக ரூ 5 கோடி முதலீட்டை அந்த நிறுவனம் பெறுகிறது.ஏஞ்சல் முதலீட்டாளர்கள் சிலரும், மும்பையைச் சேர்ந்த யுனி-எம் நெட்வொர்க்கும் இந்த நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்துள்ளனர். இந்தப் பட்டியலில் சுவாரசியமான முதலீட்டாளர்கள் இருவரும் இருக்கிறார்கள். அந்த இருவரும் வேறு யாருமல்ல, ஸ்டார் ஜோடி நடிகர் நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும்தான். 


சுனில் சேத்தியா, சுனில் குமார் சிங்க்வி, மனிஷ் மார்டியா என பெருமுதலீட்டாளர்கள் உள்ள இந்தப் பட்டியலில்தான் நடிகர் நயன்தாரா தற்போது இணைந்துள்ளார்.கூடுதலாக பெங்களூருவைச் சேர்ந்த அன்லிஸ்டட கார்ட் எல்.எல்.பி என்னும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமும் இதில் முதலீட்டாளராக இணைந்துள்ளது மற்றும் சென்னையை சேர்ந்த கன்சைய்ன்ஸ் மல்டி ஃபேமிலி ஆபிஸ் நிறுவனம் இதில் பெரும் பங்குதாரராகத் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.


இதுகுறித்துப் பகிர்ந்துள்ள சாய்வாலே நிறுவனர் விதுர் மகேஷ்வரி, ‘தற்போது கிடைத்துள்ள முதலீட்டில் 80 சதவிகிதம் எங்களுடைய கடைகளின் கிளைகள் விரிவாக்கத்துக்கு பயன்படுத்தப்படும்.அடுத்த ஆண்டுக்குள் 35 கடைகளைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். மீதமுள்ள தொகை நிர்வாக அணி, சந்தைப்படுத்துதல் மற்றும் பேக் எண்ட் விரிவாக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்’ எனக் கூறியுள்ளார். மேலும், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் மால்களிலும் தங்களது கிளைகளைத் திறக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. ‘ஊரடங்கு காலத்தில் எங்களுடைய டிஜிட்டல் வர்த்தகத்தை அதிகப்படுத்தினோம்.வலுவான முதலீட்டாளர்கள் கிடைத்திருக்கும் சூழலில் எதிர்வரும் காலங்களில் எங்களது வளர்ச்சி இலக்கு குறித்துத் தெளிவாக உள்ளோம்’ என அவர் கூறியுள்ளார்.


2018ல் தொடங்கப்பட்ட சாய்வாலே நிறுவனத்துக்குச் சென்னையில் இதுவரை 20 கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.