Tata Motors Price Hike: டாடா நிறுவனத்தின்பேருந்து மற்றும் ட்ரக்குகளின் விலை, ஜுலை 1ம் தேதி முதல் 2.5 சதவிகிதமாக உயர்த்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

டாடா வாகனங்களின் விலை உயர்வு:

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து வகையான வணிக வாகனங்களின் விலையும், ஜுலை 31ம் தேதி முதல் 2.5 சதவிகிதம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. நடப்பு 2026-27 நிதியாண்டில் அந்நிறுவனம் அறிவித்துள்ள இரண்டாவது விலை உயர்வு இதுவாகும்.  உயர்ந்து வரும் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் இதர உள்ளீட்டுச் செலவுகளின் தாக்கத்தை ஓரளவு ஈடுசெய்வதற்காக இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக டாடாவின் வணிக வாகன பிரிவு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வின் அளவு, மாடல் மற்றும் வேரியண்ட்களை பொறுத்து மாறுபடும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஜுலை 1 முதல் விலையுயர்வு அமல்:

 டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது வணிக வாகனங்கள் அனைத்திலும் திருத்தப்பட்ட விலைகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. நிறுவனம் மாடல் வாரியான விலை மாற்றங்களை வெளியிடவில்லை, ஆனால் இந்த விலை உயர்வு வெவ்வேறு மாடல்கள் மற்றும் வகைகளுக்கு ஏற்ப மாறுபடும் என்று கூறியுள்ளது.  முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் , அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் விலை மற்றும் பிற உள்ளீட்டுச் செலவுகளைக் காரணம் காட்டி, அந்நிறுவனம் தனது வணிக வாகனங்களின் விலையை 1.5% வரை உயர்த்தியிருந்தது. தற்போது அதே காரணத்தை குறிப்பிட்டு மேலும் 2.5 சதவிகித விலை உயர்வை அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் சிறிய வணிக வாகனங்கள், பிக்கப் ட்ரக்குகள், நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள், அத்துடன் பேருந்துகள் உள்ளிட்ட பலதரப்பட்ட வணிக வாகனங்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் வாகனங்களின் விலையும் உயர்வு:

முன்னதாக பயணிகள் வாகனங்களின் விலையும் வரும் ஜுலை 1ம் தேதி முதல் 1.5 சதவிகிதம் வரை உயர்த்தப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள் மற்றும் பணவீக்க அழுத்தங்களே இந்த விலை உயர்வு நடவடிக்கைக்கு காரணம் என பயணிகள் வாகனத் தயாரிப்பு நிறுவனம் கூறியிருந்தது. இந்த விலை அதிகரிப்பானது அந்நிறுவனம் தரப்பில் விற்பனை செய்யப்படும் இன்ஜின் (ICE) மாடல்கள் மற்றும் மின்சார வாகனங்கள் (EVs) ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த காருக்கு எவ்வளவு விலை அதிகரிக்கும்?

இந்திய சந்தைக்கான டாடா ப்ராண்டின் பயணிகள் வாகன போர்ட்ஃபோலியோவில், தற்போது டியாகோ, டைகோர், பஞ்ச், நெக்ஸான், சியரா, கர்வ், ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற மாடல்கள் உள்ளன. இவற்றுடன் இந்த பிராண்டில் டியாகோ EV, பஞ்ச் EV, நெக்ஸான் EV மற்றும் ஹாரியர் ஆகியவையும் உள்ளன. அதேவேளையில், சியரா EV-ஐ ஜூன் 30 அன்று நாட்டில் அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கார்களின் விலை உயர்வானது 7 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 37 ஆயிரம் ரூபாய் வரையிலும் நீளக்கூடும். 

இதையும் படியுங்கள்: Mini Countryman C: லுக், ஸ்டைல், வசதிகள் எல்லாம் ஓகே.. விலை தான் கண்ண கட்டுது..! - மினி கண்ட்ரிமேன் C தேறுமா?

டாடா மோட்டார்ஸ் தவிர, பிஎம்டபிள்யூ இந்தியா, மெர்சிடிஸ்-பென்ஸ், மாருதி சுசூகி, ஹுண்டாய் மோட்டார் இந்தியா, நிசான் மோட்டார் இந்தியா மற்றும் பிற உற்பத்தியாளர்களும் சமீபத்தில் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளன. இவற்றுள் மாருதி சுசூகி நிறுவனம் இந்திய சந்தையில் விற்கப்படும் தனது கார்களுக்கு ரூ.30,000 வரை விலை உயர்வை அறிவித்திருந்தது. இது கடந்த ஜூன் 1 முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI