கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் இளம் பெண்ணிடம் தங்கச் செயினை பறித்து தப்பிச் சென்ற வழிப்பறி குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து, நகை மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Continues below advertisement

மதுக்கரை பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயது பெண் ஒருவர் கடந்த 11.06.2026 அன்று தொப்பம்பாளையம் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் உத்தரவின்பேரில், மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

Continues below advertisement

இந்த நிலையில், மரப்பாலம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த நிஜாருதீன் @ அசரத் நிசார் (29) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் தங்கச் செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது உறுதியானது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், பறிக்கப்பட்ட தங்கச் செயின் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் பல்வேறு குற்ற வழக்குகளிலும் தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.