TN Vechile Registration: தமிழ்நாடு அரசின் வரி உயர்வு அறிவிப்பால் கார் உள்ளிட்ட வாகனங்களின், விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வாகனங்களுக்கான வரி உயர்வு - ஆதரவும் எதிர்ப்பும்:


தமிழ்நாட்டில் உள்ள 150 வட்டார  போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் யூனிட் அலுவலகங்களில் தினசரி, பைக் மற்றும் கார் என சுமார் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அப்போது, அந்த வாகனங்களின் விலையின் அடிப்படையில் அவற்றிற்கு  வரி விதிக்கப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டதன்படி, இருசக்கர வாகனங்களுக்கு 8 சதவிகிதமும், கார்களின் வகைகளுக்கு ஏற்றாற் போல் 10 முதல் 15 சதவிகிதமும் வரி வசூலிக்கப்பட்டது.


இந்நிலையில், தமிழக போக்குவரத்து ஆணையரகத்தின் பரிந்துரையின் பேரில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு வாகனங்களுக்கான சாலை வரியை கடந்த 9ம் தேதி தமிழ்நாடு அரசு உயர்த்தியது. ஆட்டோமொபைல் துறையினரும், அரசியல் கட்சியினரும் வரி உயர்வு நடவடிக்கையை கடுமையாக கண்டிப்பதோடு, உத்தரவை திரும்பப் பெறவும் வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரம், அரசின் இந்த நடவடிக்கை மாநிலத்தின் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் தனியார் போக்குவரத்து ஆகியவை அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் என, சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.


அரசு அறிவிப்பும், சரிந்த வாகன பதிவும்:


நவம்பர் 9ம் தேதி முதல் புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வரும் என, கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய நாளில் இருந்து கடந்த 8ம் தேதி வரை நாளொன்றிற்கு சுமார் 5 ஆயிரத்து 700-க்கும் அதிகமான வாகனங்கள் பதிவாகின. அது தமிழ்நாடு ஆர்டிஓ அலுவலகங்களில் நடைபெறும் தினசரி பதிவில்  புதிய உச்சமாக கூறப்படுகிறது.


அதேநேரம், புதிய வரி முறை அமலுக்கு வந்த பிறகு வாகனங்களின் பதிவு என்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாளொன்றிற்கு சராசரியாக 4 ஆயிரத்து 400 வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னையில் பதிவாகும் வாகனங்களின் எண்ணிக்கை  ஆயிரத்து 300-லிருந்து 880 ஆக சரிந்துள்ளது.  கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு வாகன பதிவு இந்த அளவில் சரிவை கண்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.


விலையும் கடுமையாக உயர்வு:


இரு சக்கர வாகனங்களின் ஒட்டுமொத்த விலை குறைந்பட்சம் 5% வரை உயர்ந்துள்ளது. ஒரு சில வணிக வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் வரியாக மட்டும் ரூ.1 லட்சம் வரை செலுத்துகின்றனர். ஷோரூம்கள் தள்ளுபடிகளை வழங்கினாலும், வாகன உரிமையாளர்கள் அதிக வரிகளை செலுத்தி வருகின்றனர்.  காரணம்,  VAHAN போர்ட்டலில் உற்பத்தியாளர் நிர்ணயித்த விகிதத்தின் அடிப்படையில் அரசாங்கம் தொடர்ந்து வரியைக் கணக்கிடுகிறது.


மேலும், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைப் போலல்லாமல், தமிழ்நாடு அரசு எக்ஸ்-ஷோரூம் விலையின் அடிப்படையில் வாகன வரி வசூலிக்கிறது. இதில் 28% சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அடங்கும். இதனால் புதிய கார்கள் மற்றும் பைக்குகள் விலை உயர்ந்துள்ளது. இதனால் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விற்பனையும், கணிசமான பின்னடைவை சந்தித்துள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI