சிம்பிள் அரைவ் குடும்ப இ-ஸ்கூட்டர்

இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் போட்டி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக மாறி வருகிறது. இளைஞர்களுக்காக ஸ்போர்ட்டி மின்சார ஸ்கூட்டர்களை வழங்கி வரும் சிம்பிள் எனர்ஜி, இப்போது குடும்பங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய மாடலை அறிமுகப்படுத்த தயாராகிவிட்டது. நிறுவனம் தனது முதல் குடும்ப மின்சார ஸ்கூட்டரை செப்டம்பர் 2, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

Continues below advertisement

இந்த புதிய ஸ்கூட்டருக்கு 'சிம்பிள் அரைவ்' (Simple Arrive) என்ற பெயர் சூட்டப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த ஆண்டு மார்ச் மாதம் சாலைகளில் சோதனை ஓட்டத்தின் போது இந்த ஸ்கூட்டர் காணப்பட்ட நிலையில், இப்போது அறிமுக தேதியை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால், வெளியீட்டிற்கான நேரம் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகியுள்ளது.

தற்போது சிம்பிள் எனர்ஜி விற்பனை செய்யும் சிம்பிள் ஒன் & சிம்பிள் ஒன்S மாடல்கள் ஸ்போர்ட்டி வடிவமைப்பால் இளைஞர்களை கவர்ந்து வருகின்றன. ஆனால் புதிய அரைவ், குடும்பப் பயனாளர்களை மனதில் கொண்டு முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதாக சோதனை மாடல் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன. கூர்மையான வடிவங்களுக்குப் பதிலாக வட்டமான வடிவத்துடன், பாரம்பரிய ஸ்கூட்டர் தோற்றத்தை இந்த மாடலில் வழங்கும் வாய்ப்பு உள்ளது.

Continues below advertisement

பேமிலிக்கான வண்டியாக வடிவமைப்பு

சோதனை ஓட்டத்தின்போது கிடைத்த தகவல்களின்படி, இந்த ஸ்கூட்டரில் நீண்ட தட்டையான ஒற்றை இருக்கை இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் வசதியாகப் பயணிக்க இந்த வடிவமைப்பு உதவும். பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் மற்றும் சென்டர் ஸ்டாண்ட் ஆகியவையும் இதில் இருக்கும்.

பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் & பின்புறத்தில் டிரம் பிரேக் வழங்கப்பட உள்ளதாக சோதனை மாடல் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது சிம்பிள் ஒன் வரிசையில் இரண்டு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் இருந்தாலும், புதிய அரைவ் மாடலில் செலவைக் குறைத்து அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற அமைப்பை நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அம்சங்கள்

இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் சிறிய ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட், நவீன TFT டிஸ்ப்ளே ஆகியவையும் இருக்கும். ஹெட்லைட்டை முன்புற ஏப்ரானில் பொருத்தியதுடன், அதன் மேல் ஒரு சிறிய விண்ட் டிஃப்ளெக்டரையும் பொருத்தியுள்ளதாக சோதனை மாடல் படங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த ஸ்கூட்டர் கவர வாய்ப்பு உள்ளது. கனமான அரிய பூமிப் பொருட்கள் தேவையில்லாமல் மின்சார மோட்டார்களை வணிக ரீதியாக உற்பத்தி செய்த முதல் இந்திய OEM ஆக சிம்பிள் எனர்ஜி சமீபத்தில் அறிவித்தது. இதே அதிநவீன மோட்டார் தொழில்நுட்பத்தை புதிய அரைவ் ஸ்கூட்டரிலும் பயன்படுத்தும் வாய்ப்புகள் தென்படுகின்றன. இதனால் உற்பத்திச் செலவு குறைவதுடன், விநியோகச் சங்கிலியைச் சார்ந்திருப்பதும் குறையும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

சந்தைக்கு வந்த பிறகு சிம்பிள் அரைவ் நேரடியாக ஏத்தர் ரிஸ்டா, TVS iQube & பஜாஜ் சேத்தக் போன்ற பிரபலமான குடும்ப மின்சார ஸ்கூட்டர்களுடன் போட்டியிடும். குடும்பப் பயனாளர்களுக்குத் தேவையான வசதிகள், நவீன அம்சங்கள் & புதிய தொழில்நுட்பத்துடன் இந்த ஸ்கூட்டரை நிறுவனம் கொண்டு வரவுள்ளதாகத் தெரிகிறது.

தற்போது, ஸ்கூட்டரின் அறிமுக தேதியை மட்டுமே சிம்பிள் எனர்ஜி அறிவித்துள்ளது. பேட்டரி திறன், ரேஞ்ச், மோட்டார் பவர், விலை & முழு அம்சங்களின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. செப்டம்பர் 2 அன்று நடைபெறும் அதிகாரப்பூர்வ அறிமுக விழாவில் இந்த முக்கிய விவரங்கள் அனைத்தும் வெளியிட வாய்ப்பு உள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI