சக்தி பீடங்களில் ஒன்றானதும், உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி ப்லவ ஆண்டு மாசி மாதம் பிரம்மோற்சவம் இன்று முதல் கொடி ஏற்றத்துடன் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் துவங்கியது.



பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். / இதைத்தொடர்ந்து உற்சவ காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் லக்ஷ்மி சரஸ்வதி தேவியுடன் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து வெளிப் பிரகார மண்டபத்தில் எழுந்தருளினார்.








கோவில் வளாகத்தில் உள்ள தங்கக் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து காமாட்சி அம்மன் உருவம் பொறித்த கொடியினை கோவில் ஸ்தானீகர்கள் வேத மந்திரங்களை ஓலித்தவாறு, மேளதாளங்கள் முழங்க, தங்க கொடி மரத்தில் ஏற்றி வைத்து பிரம்மோற்சவ விழாவை தொடங்கினார்கள்.விழாவில் கோயில் ஸ்ரீ காரியம் சுந்தரேச ஐயர், மேலாளர் செல்லா விஸ்வநாத சாஸ்திரிகள், கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



மாசி மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு காஞ்சி காமாட்சி அம்மன் திருக் கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளாலும், வண்ண மலர்மாலைகளாளும், செங்கரும்புகளாலும் அலங்கரிக்கட்டிருந்தது. பிரம்மோற்சவ கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.