யாருக்கு மருத்துவம் வரும்…?  உங்கள் ஜாதகம் மருத்துவ ஜாதகமா …?


அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே, மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதிற்கு முறைப்படி மருத்துவருக்கு படித்திருக்க வேண்டும் என்பது அத்தியாவசியம்.  ஆனால்  அந்த காலங்களில் பாட்டி வைத்தியம் என்று கூறுவார்கள் உடனடியாக  உடலுக்குள் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதற்கான இயற்கை முறையில் தீர்வு காண முயற்சிப்பார்கள்.  இப்படிப்பட்டவர்களையும் நாம் மருத்துவர் என்று கூறலாம்.  அப்படி  மருத்துவம் சார்ந்த அறிவு எந்த ஜாதகருக்கு இருக்கும்.  ஒருவர் மருத்துவ  குறிப்புகள் கூறுவதற்கு அவர் மருத்துவராக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை ஆனால்  மருத்துவத்தை முறைப்படி கற்றுக் கொண்டு மருத்துவம் பார்ப்பது என்பது சிறந்தது.  நவீன யுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரைகள் அனைத்தும்  ஏதோ ஒரு வகையில்  பாட புத்தகத்தில் மாணவர்கள் படித்து அதை மக்களுக்கு பரிந்துரை செய்து  நோயை குணப்படுத்துகின்றனர்.  ஜாதகத்தில் எந்த கிரகங்கள் வலிமையாக இருந்தால் அவர் இயற்கையிலேயே மருத்துவத்தை  தெரிந்து வைத்திருப்பவராக இருப்பார்.  அதேபோல் யார் மூலம்  மருத்துவ மேற்கொண்டால் அவர்களுக்கு உடனடியாக குணமாகும் என்பதையும் பார்க்கலாம்…


மருத்துவத்தில் கைராசியான நபர் :


கைராசியான டாக்டர் என்ற வார்த்தையை நாம் பல ஊர்களில் கேள்விப்பட்டிருப்போம்.  அவருக்கு என்னப்பா  அவரிடம் சென்றாலே நோய் குணமாகிவிடும் என்று மக்கள் கூறி  அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட மருத்துவர் பிரபலம் ஆவதையும் நாம் பார்த்திருப்போம்.  எப்படிப்பட்ட ஜாதகங்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.  நோய் பற்றி தெரிந்து கொள்ள நிச்சயமாக கேது மட்டுமே ஒரு சிறந்தவர் என்பதை  நான் தெரிந்து கொள்ள வேண்டும்.  ஜாதகத்தில் குருவின் வலிமையை வைத்து  ஏற்கனவே வந்த நோய்கள் வருகின்ற நோய்கள் இருக்கின்ற நோய்களைப் பற்றி ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வை கூற முடியும் .  சூரியன் ஒரு ஜாதகத்தில் வலிமையாக இருந்துவிட்டால் உடலை பற்றின் அத்தனை இயக்கங்களையும் அவர் தெரிந்துவராக இருப்பார்.  அனைத்து சூரியன் உச்சத்திற்கும் அல்லது ஆட்சிக்கும் இப்படிப்பட்ட சக்தி இருக்கும் என்பது இல்லை ஆனால்  சூரியன் என்ற கிரகம் நல்ல நிலையில் இருந்து அதனுடன் செவ்வாய் ஏதேனும் ஒரு வகையில் சம்பந்தப்பட்டால் மருத்துவம் அவருக்கு சிறப்பாக வரும்.  பல மருத்துவரின் ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.


சூரியனுடன் கேது சேர்ந்திருந்தால் அவர்  மிகப்பெரிய உடற் கூர் ஆய்வு மருத்துவராக இருப்பார்.  உடலின் அனைத்து பாகங்களை பற்றி அக்கு வேறு ஆணி வேறு தெரிந்து வைத்திருப்பார்.  அதேபோல்  குருவுடன் செவ்வாய்  சேர்ந்திருந்தாலும் நல்ல மருத்துவராக தான் இருப்பார்.  முன்னோர்கள் வீட்டிலேயே மருத்துவம் பார்த்து இருக்கிறார்கள்  அவர்கள் பார்த்த மருத்துவங்கள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு  நோய்களுக்கான தீர்வுகளும் நடந்து வருகின்றன.  அப்படி என்றால் மற்ற கிரகங்களான புதன் சந்திரன் சுக்கிரன் போன்றோருக்கு மருத்துவத்தோடு தொடர்பு இல்லையா என்றால் நிச்சயமாக அப்படி கிடையாது.  


ஒருவர் எந்த பாவத்தோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை பொறுத்து அவர் எந்த உடலின் பாகங்களை சரி செய்வார் என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.  உதாரணத்திற்கு ஒருவர் லக்னத்திற்கு ஐந்தாம் பாவத்தில் வலிமையான கிரகம் இருந்து அவர் பத்தாம் பாவத்தோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு பெற்று இருந்தால் நிச்சயமாக  மகப்பேறு மருத்துவராக இருக்க வாய்ப்புண்டு.  நாலாபுரத்தில் செவ்வாய் இருந்து வலிமையாக பத்தாம் பாவத்தோடு தொடர்புபட்டிருந்தால்  அவர் எலும்பு மருத்துவராக இருக்க வாய்ப்புண்டு.


 ஜாதகத்தில் ஒருவருக்கு செவ்வாய் சுக்கிரனோடு தொடர்பு பெற்று  நல்ல நிலைமையில் இருக்குமாயின் அவர் சர்க்கரை வியாதிக்கான மருத்துவராக இருக்க வாய்ப்புண்டு.  இப்படியாக நவகிரகங்களில் அனைத்து கோள்களும் ஏதாவது ஒரு வகையில் அதன் காரகத்துவங்களோடு மருத்துவத் துறைக்கு தொடர்பு பெற்றிருக்கும்.  ஏன் அனைவராலும் மருத்துவராக முடியவில்லை என்றால் ஒருவருடைய நோயை குணப்படுத்துவது கடவுளுக்கு சமமான வேலை என்பதால் நிச்சயமாக அதற்கேற்ற வலிமை உள்ள கிரகங்கள் அவருடைய ஜாதகத்தில் இருந்தால் அவரால் மட்டுமே மருத்துவராக முடியும் என்பது உண்மை அதற்கு பூர்வ புண்ணிய கர்மாவும் சேர வேண்டும்.