மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர்  திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடிமாதம் நடைபெறும் ஆடிப்பிரம்மோற்சவ பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி திருவிழாவை காண பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி கட்டி வருவது சிறப்பாக இருக்கும். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய அழகர்கோவிலில், ஆடிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, கள்ளழகர் என்று அழைக்கக்கூடிய சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.



 

இதனைத்தொடர்ந்து திருக்கோவில் பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் "கோவிந்தா, நமோ நாராயணா" என்ற பக்தி கோஷத்துடன் ஆடிப் பெருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி கிட்டதட்ட 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஸ்வாமி தினசரி காலை தங்கப்பல்லக்கிலும், இரவு தங்க, கருட, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்திலும் எழுந்தருளுவார் .

 



 

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் நாள் திருவிழாவான  திருத்தேரோட்ட பிரமோற்சவம் 24-ம் தேதி நடைபெற இருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஆகமவிதிப்படி கோவில் உட்பிரகாரத்திலயே அன்றைய விழா நடைபெறும். அன்றைய தினமே இரவு புஷ்ப பல்லக்கும் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து 10-ஆம் நாள் திருவிழாவாக 25ம் தேதி தீர்த்தவாரியும், 11ம் நாள் திருவிழாவாக 26ம் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடையும்.

 



 


 

விழாவின் ஏற்பாடுகளை கள்ளழகர் கோவில். துணை ஆணையர் அனிதா மற்றும் தக்கார் வெங்கடாஜலம் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இரண்டாவது ஆண்டாக ஆடித்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.  மேலும் திருக்கோவில் வளாகத்தில் அரசின்  மறு உத்தரவு வரும் வரை பக்தர்கள் தங்குவதற்கும், நூபுர கங்கையில் தீர்த்தில் குளிப்பதற்கும், கிடாய் வெட்டி பொங்கல் வைப்பதற்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

கொடியேற்றம் நிகழ்விற்கு பின் கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் பேசினோம்,” இந்தாண்டும் கொரோனா காரணமாக திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பது வருத்தமான விசயம்தான். ஆனால் எப்போதும் போல சாமி தரிசனம் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதித்தது ஆறுதலை தருகிறது. அடுத்த ஆண்டு அனைத்து தடைகளும் நீங்கி திருவிழா நடைபெற வேண்டும் என பிராத்தனை செய்துகொண்டோம்” என்றனர்.