கி.மு 4-ம் நூற்றாண்டில், கொற்கையைத் தலைநகரகவும், துறைமுகமாகவும் கொண்ட பாண்டியநாட்டை கோமார வல்லப பாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தான். தோஷம் நீங்க 1,008 அந்தணர்களை அழைத்து வந்து மிகப்பெரும் யாகம் நடத்த திட்டமிட்டார். மன்னனின் உத்தரவுப்படி ஏற்பாடுகளும் நடந்தன. நர்மதை நதிக்கரையில் இருந்து மரக்கலங்களில் கொற்கைக்கு அந்தணர்களை அழைத்து வந்தார். யாகம் நடைபெறும் இடத்திற்கு வந்த அந்தணர்களை எண்ணிப் பார்த்ததில் 1,007 பேர்தான் இருந்துள்ளனர்.விநாயக பெருமானே என்ன சோதனை இதுவென மன்னன் கலங்கிய போது,ஒரு அந்தணர் அங்கு வந்து சேர்ந்தார். மகிழ்ச்சியடைந்த மன்னன், யாகத்தைச் சிறப்பாக நடத்தி முடித்தார். யாகத்தின் முடிவில் அனைத்து அந்தணர்களுக்கும் தாம்பூலம் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றார் மன்னன்.



1,008வது அந்தணருக்கு தாம்பூலம் வழங்கிய போது, அந்த அந்தணருக்கும் மன்னனுக்கும் வந்தவருக்கும் வாதம் நடந்தது. வாதத்தின் நிறைவில்,மன்னா வந்தது யாரென தெரியவில்லையா என அந்தணர் கேட்க, நொடியில் மன்னனுக்கு விநாயகராக காட்சி அளித்து யாகத்தை பூர்த்தி செய்த  இவ்விடத்திலேயே கோவில் எழுப்பி வணங்கி வா என சொல்லி மறைந்தாராம் என்கின்றனர் பக்தர்கள், இதனை தொடர்ந்து அரண்மனையில் இருந்த விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்த மன்னர் ஆயிரத்தெட்டாவது அந்தணராக யாகம் செய்ததால் ஆயிரெத்தெண் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.




தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள ஆறுமுகமங்கலத்தில் உள்ளது, ’சுவாமி ஸ்ரீ ஆயிரெத்தண் விநாயகர் திருக்கோயில்’. தேர், கோபுரம், கொடிமரம் எனக் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இக்கோயில், கி.மு 2,300 ஆண்டுகள் பழமையானது என்கிறது ஆலய வரலாறு. தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட விநாயகர் ஸ்தலம் என்கிறார்கள். கருவறையில் மூலவரான ’ஆயிரெத்தெண் விநாயகர்’, நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.




சித்திரைமாத 10 நாள் திருவிழாதான் இக்கோயிலில் நடைபெறும் முக்கிய பிரமோற்சவம். சித்திரை மாதம் ரோகினி நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 6-ம் நாள் திருவிழாவில் தாமிரபரணி நதிக்கரையில் கல்யாண சுந்தரி அம்பாள், உற்சவர் ஆயிரெத்தெண் விநாயகருக்கு ’ஞானப்பால் கொடுத்தல்’ வைபம் நடைபெறும். அன்று மாலை யானை வாகனத்தில் விநாயகர் பட்டாபிஷேக்காட்சியும், அதனைத் தொடர்ந்து ஆதிசங்கரர் இந்த ஆலயத்தில் வந்து எழுதிப்பாடிய ‘கணேச பஞ்சரத்ன கீர்த்தனை’ உடைய ஓலைச்சுவடி, செப்புப்பட்டயம் வைக்கப்பட்டு விசேச தீபாராதணையும் நடைபெறும். அன்று ஒருநாள் ஒலைச்சுவடி, செப்புப்பட்டயத்தை பக்தர்களும் காணமுடியும். 10-ம் நாள் திருவிழாவில் காலையில் உற்சவர் ஆயிரெத்தெண் விநாயகர் ரதவீதிகளில் திருத்தேரில் வலம் வருதல் நடைபெறும்.



விநாயகர் சதுர்த்தி அன்று காலையில் கணபதி ஹோமமும் 21 வகையான அபிஷேகமும் தீபாராதணையும் நடைபெறும். மாலையில் மூஷிக வாகனத்தில் உற்சவர் ஆயிரெத்தெண் விநாயகர் வீதியுலா புறப்பாடும் நடைபெறும்.  பொதுவாக பிரதோஷம் என்றல், சிவாலங்களிலோ அல்லது சிவபரம்பொருள் தேவியுடன் காட்சிதரும் கோயில்களிலோ சுவாமி அம்பாள், நந்திகேஸ்வரருக்கு  சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பிரதோஷநாதராக சிவபெருமான் நந்தி வாகனத்தில் கோயிலை வலம் வருதல் நடைபெறும்,இங்கு சுவாமி, அம்பாள் சந்நிதி இருந்தாலும், இங்கு விநாயகப் பெருமானே ஆட்சி புரிவதால், பிரதோஷத்தன்று விநாயகருக்கும், மூஷிகருக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெற்று மூஷிக வாகனத்தில் பிரதோஷநாதராக பிரதோச விநாயகமூர்த்தி கிரிவலம் வருவார். ஆதிசங்கரருக்கு வயிற்றுவலி ஏற்பட்டபோது, இத்தலத்தில் ‘கணேச பஞ்சரத்ன கீர்த்தனம்’ பாடி பிறகு திருச்செந்தூருக்குச் சென்று சுப்பிரமணியர் சந்நிதியில், ‘சுப்பிரமணிய புஜங்கம்’ பாடி பின்னர் நோய்வலி நீங்கப் பெற்றாராம். அவர் பாடிய பாடலின் பிரதி, ஓலைச்சுவடி, செப்புப்பட்டயத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  அகத்தியர், ரோமரிஷி, வேதவியாசர், பதஞ்சலி, காகபுஜண்டர் ஆகியோரும்  இத்தல விநாயரை வணங்கிச் சென்றுள்ளனர்.



அனைத்து விதமான தடைகள் நீங்கிட அருகம்புல் அல்லது வெள்ளெருக்கு இலையால் அர்ச்சணை செய்து, இரண்டு தேங்காயை இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு தடைபட்ட காரியம் சித்தியாக மனமுறுக ஆயிரெத்தெண் விநாயகரை வேண்டிக் கொண்டு, பிரகாரத்தை 7 முறை சுற்றி வர வேண்டும். பின்னர், அந்த இரண்டு தேங்காயை ’பிராத்தைத் தேங்காய்’ எனச் சொல்லி விநாயகரின் பாதத்தில் வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக சமர்ப்பிக்கும் தேங்காய்கள், மறுநாள் கன்னி விநாயகர் சந்நிதியில் கன்னிவிநாயகரைச் சுற்றி அடுக்கி வைக்கப்படுகின்றன. அந்த பிராத்தனை தேங்காய்கள், ஒவ்வொரு சங்கடஹரசதுர்த்தி நாளன்று காலையில் நடைபெறும் ’மஹா ஹோம’த்திற்குள் போடப்படுகிறது. ஹோமத்திற்குள் போடப்படும் தேங்காய்கள் ஒன்றுகூட வெடிப்பதில்லையாம்,அப்படியே சாம்பலாகி விடுவதுதான்  சொல்கிறார்கள் பக்தர்கள். தடையை நினைத்து சமர்ப்பிக்கப்பட்ட பிரார்த்தனை தேங்காய்கள், யாக குண்டத்தில் சாம்பலாகிவிடுவது போல நிலவி வந்த தடைகளும் சாம்பலாகிவிடும் என்கிறார்கள். அந்த சாம்பலுடன், சங்கடஹரசதுர்த்தி நாளில் மூலவருக்கு நடக்கும் விபூதி அபிசே, விபூதியைக் கலந்துதான் பக்தர்களுக்கு விபூதிப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.