சைவ சமயத்தில் முதல் குருவாகவும், சிவபெருமானின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர். சிவாலயங்களில் சிவலிங்கத்தின் முன் நோக்கி நந்தி பகவான் சிலை அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் தங்குமிடமான கயிலை மலை நுழைவாயிலை பாதுகாக்கும் தெய்வமாகவும் நந்தி பகவான் விளங்கி வருகிறார். நந்தி பகவான் பொதுவாக ஒரு காளையாக சித்தரிக்கப்படுகிறார். இவர் சிவனுடைய வாகனமாகவும் கருதப்படுகிறார். சைவ சித்தாந்த மரபின் படி, நந்திநாத சம்பிரதாயத்தின் எட்டு சீடர்களின் பிரதான குருவாக நந்தி தேவர் கூறப்படுகிறார். 




ஒவ்வொரு மாதமும் சிவாலயங்களில் அமைந்துள்ள நந்தி பெருமானுக்கு பிரதோச நாளில் பிரதோச வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதிலும் சனி பிரதோஷம் மற்றும் செவ்வாய் பிரதோஷம் விசேஷமாக இந்துக்கள் கருதி அந்த இரு பிரதோஷத்தையும், தவறாமல் விரதமிருந்து சிவாலயங்களுக்கு சென்று நந்தி பெருமானுக்கு நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு பிரார்த்தனைகளில் ஈடுபடுவார். குறிப்பாக சனி பிரதோஷத்தில் கலந்துகொள்வது மற்ற பிரதேசங்களில் கலந்து கொள்வதை விட கூடுதல் அருள் கிட்டும் ,வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. இதுபோன்று தமிழ் மாதங்களில் ஒரு சில மாதங்களில் வரும் பிரதோச வழிபாடும் சிறப்பு உடையதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் இன்று அனைத்து சிவாலயங்களிலும், ஆனி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.




இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள பிரசித்திபெற்ற காவிரி துலா கட்டத்தில், காவிரி ஆற்றின் நடுவில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு சிவாச்சாரியர்கள் தெப்பத்தில் சென்று ஆனிமாத பிரதேச வழிபாடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தளத்தில் பார்வதிதேவி மயில் உரு கொண்டு சிவபெருமானை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்ற தலமாக இத்தலம் திகழ்ந்து வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க இத்தளத்தில், ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் நந்தி பகவானுக்கு வெகுவிமரிசையாக ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கம்.




அதன்படி ஆனி மாதம் செவ்வாய் கிழமை பிரதோஷ தினமான இன்று கோவில் கொடிமரம் அருகே உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் திரவிய பொடிகளை கொண்டு சிவாச்சாரியார்கள் சிறப்பு  அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து நந்தி தேவர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதுபோல மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் காவிரி ஆற்றின் நடுவே வேறு எங்கும் இல்லாத வகையில் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ள நந்திதேவருக்குசிவாச்சாரியார்கள் பிரதோஷ சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். இந்த இரு பிரதோஷ வழிபாட்டு தலங்களிலும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழக்கமாக மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளும் பக்தர்கள் இன்றி கோவில் ஊழியர்கள் மற்றும் கலந்துகொண்டு எளிமையான முறையில் பிரதோஷ வழிபாடு நடைப்பெற்றது.