உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் திருவிழா நடைபெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய உற்சவமான நேற்று, வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வாகன அலங்கார மண்டபத்தில் மல்லி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நீலம், ரோஸ் வண்ணத்துடனான வெண்பட்டு உடுத்தி வரதராஜ பெருமாளை கருடன் சுமந்தவாறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

 


 

கோவிலில் இருந்து புறப்பட்ட வரதராஜ பெருமாள் ரங்கசாமி குளம், கீரை மண்டபம், மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம் மற்றும் நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  வழியெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபாராதனை செய்தும் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி செல்லும் பகுதியின் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.


 

 

இரண்டு வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற கருடசேவை விழாவில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வரதரை தரிசித்து விட்டு சென்றனர். இந்த விழாவின் பொழுது ஆடல் பாடலுடன் பஜனை பாடிய ஒருவரின் ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் வரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் மத்தியிலும் அவருடைய நடனம், கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து யார் அவர் என்று கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்தது. வித்தியாசமான முறையில் நடனமாடிய அம்முதியவரை ஏபிபி நாடு சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம்.



 

உங்கள் பெயர் , என்ன உங்கள் ஊர் , எத்தனை வருடங்களாக பஜனை பாடி வருகிறார்கள் ?

 

நான் காஞ்சிபுரம் மாவட்டம் மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர், என்னுடைய பெயர் முகுந்தன் ராமானுஜ தாசர். எனக்கு வயது 63 ஆகிறது.  நான் சுமார் முப்பது வருடங்களாக பஜனை பாடி வருகிறேன். எனது தந்தை மூலமாக எனக்கு பஜனை பாடுவது ஈர்ப்பு ஏற்பட்டது. தற்போது படிப்படியாக வளர்ந்து எனக்கென்று ஒரு குழுவை வைத்து பாடும் அளவிற்கு கடவுள் என்னை ஆசீர்வதித்துள்ளார்.




எத்தனை கோவிலில் பஜனை பாடி உள்ளீர்கள் ?

 

சுமார் 30 வருடங்களாக பஜனை பாடி வருகிறேன். திருப்பதி, ஸ்ரீரங்கம் ,நாகப்பட்டினம், பாண்டிச்சேரி, தஞ்சாவூர் ,மைசூர் உள்ளிட்ட பல பெருமாள் ஆலயங்களில் பஜனை பாடி உள்ளேன். வரதராஜ பெருமாள் கோவிலில் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக வரதராஜனை புகழ்ந்து பாடி வருகிறேன்.  எனக்கு குருவாக இருந்தவர் தொழுப்பேடு ரங்கநாதன் ராமானுஜ  தாசர். அவர்தான் எனக்கு எப்படி பாட வேண்டும் என தெரிவித்தார்.

 

வித்தியாசமான முறையில் ஆடிப் பாடுவதை கற்றுக்கொண்டது எப்படி ?

 

அனைத்திற்கும் எனது குரு மற்றும் எனது கடவுள் பெருமாளை சாரும், ஆடிப்பாடுவது தான் பெருமாளுக்கு நாம் செய்யும் மிக முக்கிய நேர்த்திகடன். அது தான் கடவுளுக்கு பிடிக்கும் என எனது குரு சொன்னார். அப்போதிலிருந்து நான் அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொண்டேன்.  நான்  சண்முகப்பிரியா உள்ளிட்ட ராகங்களில் பாடல் பாடி கடவுளையும், பொது மக்களையும், பக்தர்களையும் மகிழ்விப்பேன். பஜனையில் பாடும்பொழுது என்னை மீறி பலமுறை நடனமாடுவேன்





அவ்வாறுதான் எப்பொழுதும் போல நான் ஆடல் பாடலில் ஈடுபட்டு வந்தேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு வரதராஜரின் திருவிழா நடைபெறுவதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன். நீங்கள் சொல்லிய பிறகுதான் எனக்கு  தெரியும், அந்த வீடியோ பல  பேரை சென்று அடைந்துள்ளது . எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது, எல்லாம் வரதராஜரையே சாரும் என தெரிவித்தார்.

 

தற்பொழுது நடக்கும் காஞ்சிபுரம் வரதர் கோவில் திருவிழாவில் இவர்தான் வைரல்.