சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை - ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிப்பு..!
மகர விளக்கு பூஜைக்காக கோயிலின் நடை மீண்டும் வரும் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை நடைபெற உள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐய்யப்பன் சாமியை வழிபடுவார்கள். கடந்த ஓராண்டாக கொரோனா காரணமாக அதிகளவில் பக்தர்கள் சபரிமலைக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு கொரோனா சற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் குறிப்பிட்ட எண்ணிகையில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் வருவோர், கொரோனா இல்லை என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
Just In




இந்த நிலையில், இந்தாண்டு கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து, இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையில் அதிகளவில் பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 15-ஆம் தேதி கோயிலின் நடை திறக்கப்பட்டு 16-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்த 60,000 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனம் செய்து வருகின்றனர். முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை நடைபெற உள்ளது. கடந்த 22ஆம் தேதி ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட தங்க அங்கு இன்று மதியம் பம்பை வந்தடைந்தது. தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட தங்க அங்கி மாலை 5.30 மணிக்கு சன்னிதானம் சென்றடைந்து, மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, நாளை காலை 11 மணிக்கு நடக்கும் களபாபிஷேகத்துக்கு பிறகு 11.55 முதல் மதியம் 1 மணி வரை மண்டல பூஜை நடைபெறும். இதனால், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மதியம் நடை அடைத்த பின், மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அத்தாழ பூஜைக்குப் பின் இரவு 9.50 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். பின்னர், மகர விளக்கு பூஜைக்காக கோயிலின் நடை மீண்டும் வரும் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்