உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத பௌர்ணமி பூஜை.


கரூர் உழவர் சந்தை ஸ்ரீ பிரம்ம தீர்த்தம் சாலையில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத பௌர்ணமி பூஜையை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் ,விபூதி, குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




 


அதைத்தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார்  ஸ்ரீ வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி மாத பௌர்ணமி பூஜை நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.




கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் தீர்த்த குடம் எடுத்துச் சென்று வழிபாடு.


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே புனவாசிபட்டியில் உள்ள ஸ்ரீ விநாயகர், முருகன், ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோயில் புனரமைக்கப்பட்டு 12 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.





 கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று கோயில் பங்காளிகள், மாமன், மைத்துனர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என 500 க்கும் மேற்ப்பட்டோர் கருப்பத்தூரில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் கணபதி ஹோமத்துடன் முதலாம் காலை பூஜை துவங்கப்படுகிறது. அதன்பின் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் காலபூஜை, 12 ம் தேதி காலை நான்காம் காலபூஜை செய்து காலையில்  கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


 




அதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் தளவாபாளையம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலும், அதைத் தொடர்ந்து புகலிமலை மகாசக்தி மாரியம்மன் ஆலயத்திலும் ஆவணி மாத பௌர்ணமி பூஜை நடைபெற்றது. மேலும், கரூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு அம்மன் ஆலயங்களில் பௌர்ணமி பூஜைக்காக ஆலயங்கள் அதிகாலை முதல் திறக்கப்பட்டு காலை முதல் சிறப்பு அபிஷேகம் அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்று வருகிறது. பௌர்ணமி பூஜையை முன்னிட்டு இன்று தேங்காய், பழம், பூ வாழையிலை, மாலை உள்ளிட்ட பொருட்களின் விலை சற்று அதிகரித்து உள்ளது.