கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றும் வினோத திருவிழா நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில்  500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கிருஷ்ணராயபுரம் தேவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.




இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 19 அன்று பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடனை நிறைவேற்றும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றது. முன்னதாக ஆடி 18 அன்று இரவு மகாதானபுரம் காவிரி ஆற்றில் பூசாரி கத்தி வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆடி 19 காலை, சுவாமி  மகாலட்சுமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலா கண்டு கோவிலை வந்தடைந்தார்.




பின்னர் சுவாமி அம்பாளுக்கு பரம்பரை பூசாரி கால் ஆணி அணிந்து சிறப்பு பூஜைகள் செய்தார். பின்பு கோவில் கொடி மரத்தில் விளக்கு ஏற்றப்பட்டு கருடன் வட்டமிட்டத்தை தொடர்ந்து ஏழு பூசாரிகளும் ஒன்றாக கோயிலை வலம் வந்தனர். பெரிய பூசாரியின் மேல் அம்மன் அருள் வந்து இறங்கியதும், சப்த கன்னியமார்களை குறிக்கும் வகையில் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த 24 மணி தெலுங்கு செட்டியார் ஏழு பேரும், குடும்ப கவுண்டர் தலையில் முதலில் தேங்காய் உடைக்கப்பட்டு, பின்னர் வரிசையாக அமைந்திருந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. தலையில் தேங்காய் உடைக்கும் போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று நாம முழக்கமிட்டும், மகாலட்சுமி தாயே என்றும் கோஷம் எழுப்பினர்.




இதில் சென்னை, கோவை, திருப்பூர், சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா வெளிமாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர். இதில் சுமார் 3000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில் 500-க்கும் மேற்பட்ட பக்தர் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டு, அதில் 30-க்கும் மேற்பட்டோர் தலையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வந்த நிலையில் அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண